| ADDED : டிச 05, 2025 06:09 AM
திருப்புவனம்: திருப்புவனத்தில் சாலையை கடக்க முடியாமல் பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாகின்றனர். திருப்புவனம் மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் வசித்து வருகின்றனர். திருப்புவனத்தில் சாலையை ஒட்டி இருபுறமும் வங்கிகள், பள்ளிகள், கோர்ட், போலீஸ் ஸ்டேஷன், பேரூராட்சி அலுவலகம், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் அமைந்துள்ளன. கிராமங்கள் மற்றும் வெளியூர்களில் இருந்து வரும் மக்கள் அலுவலகங்களுக்கு சாலையை கடந்து தான் செல்ல வேண்டியுள்ளது. திருப்புவனம் வழியாக தினசரி 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. நகர்பகுதியில் தற்போது டூவீலர்கள் பயன்பாடும் அதிகரித்துள்ளது. குழந்தைகளை பள்ளிக்கு சென்று விட அழைத்து வர , மார்க்கெட் செல்ல என பலரும் டூவீலர்களை அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். சாலையின் ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு செல்ல நீண்ட நேரம் காத்துகிடக்க வேண்டியுள்ளது. நகர்ப்புறங்களில் சாலையை கடக்க குறிப்பிட்ட இடங்களில் போக்குவரத்து போலீசார் வெண்மை நிற கோடுகளை வரைவது வழக்கம், பள்ளிகள், மருத்துவமனைகள் உள்ளிட்ட இடங்களில் சாலையை கடக்க இந்த கோடு பயனுள்ளதாக இருக்கும், திருப்புவனத்தில் இதுவரை போக்குவரத்து போலீசார் போக்குவரத்தை கட்டுப்படுத்தவோ, சாலையை கடக்கவோ எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. சாலை விதி மீறலையும் கண்டு கொள்வதில்லை. இதனால் பலரும் டூவீலர்களில் வேகமாக செல்கின்றனர். திருப்புவனம் அரசு மருத்துவமனைக்கு தினசரி 700க்கும் மேற்பட்டவர்கள் வந்து செல்கின்றனர். முதியவர்கள், குழந்தைகள் சாலையை கடந்து மருத்துவமனைக்கு செல்ல நீண்ட நேரம் காத்து கிடக்க வேண்டியுள்ளது. எனவே போக்குவரத்து போலீசார் நகர் பகுதியில் சாலைகளை பொதுமக்கள் பாதுகாப்பாக கடக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.