அரசனுாரில் 19 நாட்களாக திறக்காத ரேஷன் கடை: கிராம மக்கள் தவிப்பு
சிவகங்கை: சிவகங்கை அருகே அரசனுார் சமத்துவபுரத்தில் உள்ள ரேஷன் கடை 19 நாட்களாக திறக்கவில்லை என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். நுகர்பொருள் வாணிப கழக நிர்வாகத்தின் கீழ் சிவகங்கை ஊராட்சி ஒன்றியம், அரசனுார் ஊராட்சி சமத்துவபுரத்தில் ரேஷன் கடை இயங்குகிறது. இந்த கடையின் மூலம் சமத்துவபுரம், சித்தாலங்குடியை சேர்ந்த 150 கார்டுதாரர்கள் அரிசி, பருப்பு, சர்க்கரை, பாமாயில் உள்ளிட்ட பொருட்களை வாங்கி பயன் பெறுகின்றனர். சமத்துவபுரம் ரேஷன் கடையையே நம்பி வாழும் இப்பகுதி மக்களுக்கு ஏமாற்றம் அளிக்கும் விதமாக, ஆக.,1 முதல் 19 ம் தேதி வரை தொடர்ந்து சமத்துவபுரத்தில் உள்ள ரேஷன் கடை திறக்கப்படவே இல்லை. ஆக., மாதத்திற்கான உணவு பொருட்களை வாங்கி பயன்படுத்த முடியாத நிலைக்கு சமத்துவபுரம், சித்தாலங்குடி பகுதி மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். மாவட்ட நிர்வாகம் இங்குள்ள ரேஷன் கடையில் தடையின்றி ரேஷன் பொருட்கள் கிடைக்க நடடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.