மானாமதுரை-காளையார்கோவில் அரசு பஸ் இயக்க கோரிக்கை
சிவகங்கை: காளையார்கோவிலுக்கு பெரியகண்ணனுார், புளியங்குளம் உள்ளிட்ட 10 கிராம மக்கள் பயன்பெற மானாமதுரையில் இருந்து பெரியகண்ணனுார் வழியாக அரசு பஸ் இயக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.காளையார்கோவில் தாலுகாவில் உள்ள பெரியகண்ணனுார், புளியங்குளம், நெம்மேனி, பொட்டகவயல் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் காளையார்கோவில் வர முறையான பஸ்வசதி இல்லாததால் சிவகங்கையை சுற்றி காளையார்கோவில் வரவேண்டிய நிலை உள்ளது.இவர்கள் தாலுகா அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம் வர காளையார்கோவில் தான் வரவேண்டும். தற்போது 20 கிலோமீட்டர் துார முள்ள சிவகங்கைக்கு பஸ்சில் வந்து மீண்டும் 18 கிலோமீட்டர் துார முள்ள காளையார்கோவில் செல்ல வேண்டும்.மானாமதுரையில் இருந்து புளியங்குளம் வழியாக பெரியகண்ணனுார், நெம்மேனி, அதபடக்கி, பொட்டகவயல், மறவமங்கலம் உள்ளிட்ட கிராமங்களை இணைத்து காளையார்கோவிலுக்கு பஸ் இயக்கினால் இந்த பகுதி மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை வைக்கின்றனர்.