உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / சிவகங்கை சிறை காவலர் மீது  ரூ.39.30 லட்சம் கையாடல் வழக்கு

சிவகங்கை சிறை காவலர் மீது  ரூ.39.30 லட்சம் கையாடல் வழக்கு

சிவகங்கை:சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே உள்ள புரசடை உடைப்பு திறந்த வெளி சிறை காவலர் மீது ரூ.39.30 லட்சம் கையாடல் செய்ததாக சிவகங்கை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்தனர். புரசடை உடைப்பில் மதுரை மத்திய சிறை நிர்வாகத்தின் கீழ் திறந்தவெளி சிறை உள்ளது. நன்னடத்தை அடிப்படையில் கைதிகள் தேர்வு செய்யப்பட்டு இங்கு விவசாய பணிகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர். இதற்காக தினமும் சம்பளம் வழங்கப்படுகிறது. தண்டனை கைதிகள் பண்டிகை நாட்களில் பரோலில் குடும்பத்தினரை சந்திக்க செல்லும்போது சம்பளத்தை பெற்றுச் செல்வது வழக்கம். சமீபத்தில் நடந்த தணிக்கையில் விடுதலையாகி சென்ற கைதிகளுக்கு சம்பளம் வழங்காதது தெரியவந்தது. மதுரை சிறை கண்காணிப்பாளர் சதீஷ்குமார் விசாரித்து சம்பளம் வழங்கும் பணியை கவனித்த காவலர் அலெக்ஸ்பாண்டியனை சஸ்பெண்ட் செய்தார். தொடர்ந்து சிறப்பு தணிக்கை குழுவினர் ஜூலை 9 முதல் 18 வரை தணிக்கை நடத்தினர். இதில் சிறையின் பல்வேறு வங்கி கணக்கிலிருந்து ரூ.39 லட்சத்து 30 ஆயிரத்தை அலெக்ஸ்பாண்டியன் போலி ஆவணங்கள் மூலம் கையாடல் செய்தது உறுதியானது. இதையடுத்து அலெக்ஸ்பாண்டியன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க மதுரை சிறை கண்காணிப்பாளர் சதீஷ்குமார் சிவகங்கை மாவட்ட குற்றப் பிரிவு போலீசில் புகார் அளித்தார். அலெக்ஸ்பாண்டியன் மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளனர். 2020 ஜூன் 29 காவலராக பணியில் சேர்ந்த அலெக்ஸ்பாண்டியன் டிச.5 முதல் முழுநேர அலுவலக பணியாளராக மாற்றப்பட்டு சம்பள கணக்கு பணிகளையும் செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை