உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / பொங்கல் அறுவடைக்கு தயாராகும் கரும்பு  சாலுார் விவசாயிகள் மும்முரம்  

பொங்கல் அறுவடைக்கு தயாராகும் கரும்பு  சாலுார் விவசாயிகள் மும்முரம்  

சிவகங்கை : பொங்கல் பண்டிகையை வரவேற்கும் விதமாக சிவகங்கையில் கரும்பு, மஞ்சள் அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளன.சிவகங்கை அருகே சாலுார் ஊராட்சிக்கு உட்பட்ட கீழ, மேல சாலுார், பெருமாள்பட்டி, வேலனி தெற்கு, வடக்கு, பாப்பாகுடி உள்ளிட்ட சுற்றுப்புற கிராமங்களில் விவசாயம் முக்கிய பங்கு வகிக்கிறது. இங்கு காய்கறிகள், சீசனுக்கு ஏற்ப பயிர்களை விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர். தை பொங்கல் பண்டிகைக்காக இங்கிருந்து கரும்பு வியாபாரிகள் மதுரை, ராமநாதபுரம், திருச்சி, சென்னை உள்ளிட்ட பகுதிகளில் விற்பனைக்கு அதிகளவில் வாங்கி செல்வர். இது தவிர பொங்கல் பானைகளில் மஞ்சள் கிழங்கு கட்டி வைத்து, இயற்கையை வழிபடுவது வழக்கம்.பானைகளில் கட்டுவதற்கு தேவைப்படும் மஞ்சள் கிழங்குகளும் இப்பகுதியில் விளைந்து, அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளன.

பொங்கலுக்கு 7 அடி உயர கரும்பு

வேலனி தெற்கு விவசாயி பி.ஏ., ராமன் கூறியதாவது: இப்பகுதியில் ஏராளமான விவசாயிகள் செங்கரும்பு, மஞ்சள் கிழங்கு நடவு செய்து, தை பொங்கலுக்கு அறுவடை செய்ய தயார் நிலையில் வைத்துள்ளோம். ஒவ்வொரு கரும்பும் 7 அடி உயரம் வரை வளர்ந்துள்ளன. ஒவ்வொரு ஆண்டும் பிப்., மார்ச் மாதங்களில் கரும்பு கட்டைகளை நடவு செய்து, தொடர்ந்து 10 மாதங்கள் வரை உரமிட்டும், களையெடுத்தும் வளர்த்து, தை மாதத்தில் அறுவடை செய்வோம். அரசு பொங்கல் தொகுப்புடன் கரும்பு வழங்கினால், ஒரு கரும்பிற்கு விவசாயிக்கு ரூ.26 வரை கிடைக்க செய்ய வேண்டும். ஒரு ஏக்கருக்கு கரும்பு பயிரிட்டு வளர்க்க ரூ.70,000 முதல் 80,000 வரை செலவிடுகிறோம். கிணற்று பாசனத்தை நம்பியே கரும்பு, மஞ்சள் கிழங்கு பயிரிட்டுள்ளோம். பொங்கலுக்கு நல்ல விலைக்கு கரும்பு போனால் தான் விவசாயிக்கு உரிய லாபம் கிடைக்கும், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ