தேவகோட்டையில் சகதியில் தற்காலிக பஸ் ஸ்டாண்ட்
தேவகோட்டை: தேவகோட்டையில் அடிப்படை வசதிகளின்றியும், தரைத்தளம் சகதி காடாக தற்காலிக பஸ் ஸ்டாண்ட் காட்சி அளிப்பதால், பயணிகள் பெரிதும் அவதிக்குள்ளாகின்றனர். தேவகோட்டையில் புதிய பஸ் ஸ்டாண்ட் கட்டுவதற்கான பணிகள் துவங்கி நடைபெற்று வருகிறது. இதனையொட்டி ராம்நகர் பகுதியில் வீட்டு வசதி குடியிருப்பு அருகே மிகவும் தாழ்வான இடத்தில் தற்காலிக பஸ் ஸ்டாண்ட் செயல்படுகிறது. லேசான மழை பெய்தாலே 3 அடி ஆழத்தில் உள்ள பள்ளத்தில் மழை நீர் தேங்கி விடுகிறது. இதனால் பஸ் ஸ்டாண்ட் வளாகம் சகதிகாடாக காட்சி அளிக்கின்றன. இத்தற்காலிக பஸ் ஸ்டாண்ட் 2.5 ஆண்டுகள் வரை செயல்படும் என்ற போதிலும், அடிப்படை வசதிகளே இன்றி சகதி காடாக காட்சி அளிப்பது பயணிகளை வேதனைக்கு உள்ளாக்கியுள்ளது. நகராட்சி அதிகாரிகள் தற்காலிக பஸ் ஸ்டாண்டில் மழை நீர் தேங்கி, சகதி காடாக காட்சி அளிப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.