அச்சுறுத்தும் சாலை அகலப்படுத்தும் பணி
சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே ரோடு அகலப்படுத்தும் பணி முறையாக நடக்காததால் விபத்து அபாயம் நிலவுகிறது.இவ்வொன்றியத்தில் அரளிக்கோட்டையில் இருந்து ஜெயங்கொண்ட நிலை வரையிலான 11 கி.மீ., சாலை அகலப்படுத்தப்படுகிறது. ஏற்கனவே அரளிக்கோட்டையில் இருந்து வடவன்பட்டி வரையிலான பணிகள் முடிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது வடவன்பட்டியில் இருந்து ஜெயங்கொண்ட நிலை வரை 6 கி.மீ., சாலை அகலப்படுத்தப்பட்டு வருகிறது.இப்பணிக்கு இடையூறாக இருந்த மின்கம்பங்களை அகற்றி வேறு இடத்தில் நட்ட பிறகு அகலப்படுத்த மக்கள் வலியுறுத்தி இருந்தனர். ஆனால் மின்கம்பங்களை இடம் மாற்றாமல் அதையொட்டியே சாலை அமைத்து வருகின்றனர்.இதனால் இரவு நேரங்களில் டூவீலரில் வருபவர்கள் மின்கம்பங்களில் மோதி விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. மேலும் இணைப்பு சாலைகளில் ஒரு அடி உயரம் வரை படிக்கட்டு போல் புதிய சாலை உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மெயின் ரோட்டில் ஏற முடியாமல் அவதிப்படுகின்றனர். அந்த இடங்களிலும் விபத்து அபாயம் உள்ளது. எனவே சாலையில் இடையூறாக உள்ள மின்கம்பங்களை மாற்றி நடுவதுடன் இணைப்புச் சாலைகளில் சாய்தள ரோடு அமைக்க அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.