பழுதாகி நின்ற அரசு பஸ் மீது கார் மோதி மூவர் உயிரிழப்பு
சிறுகனுார்: தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே கண்டம்பட்டியை சேர்ந்தவர் ஜோசப், 23; டிராவல்ஸ் கார் ஓட்டி வருகிறார். சொந்த ஊரில் நடந்த உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்காக சென்று விட்டு, நேற்று முன்தினம் சென்னை கிளம்பியுள்ளார். புதுப்பட்டியை சேர்ந்த செல்வகுமார், 35, அவரது மனைவி யசோதா, 31, ஒன்றரை வயது குழந்தை அனுவஞ்சனா, செல்வகுமார் நண்பர் விஜய்பாபு, 31, ஆகியோர் சென்னைக்கு அவருடன் வந்தனர். நேற்று அதிகாலை, 2:00 மணிக்கு, திருச்சி, சமயபுரம் அடுத்துள்ள நெடுங்கூர் அருகே வந்த போது, பழுதாகி சாலையோரம் நின்றிருந்த அரசு பஸ்சின் பின்பக்கம் கார் மோதியது. இதில், விஜய்பாபு, யசோதா, அனுவஞ்சனா ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். கார் டிரைவர் ஜோசப், செல்வகுமார் ஆகியோர் படுகாயமடைந்தனர். பழுதான பஸ் இருட்டில் நிறுத்தப்பட்டிருந்தது. எச்சரிக்கை விளக்கு போடப்படவில்லை. இதனால் விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்து நடந்ததும், பஸ் ஓட்டுநர், நடத்துநர் அங்கிருந்து தப்பிவிட்டனர். இது குறித்து சிறுகனுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.