மாநகராட்சி ஊழியர் என கூறி 25 சவரன் லபக்கியவர் கைது
தஞ்சாவூர்:தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தை சேர்ந்த கார் டிரைவர் தனராஜ். இவரது மனைவி உஷா. இவர்களுக்கு இரு மகன்கள் உள்ளனர். நவ., 12ல் வீட்டில் உஷா தனியாக இருந்த போது, இருவர் வந்து, மாநகராட்சியில் இருந்து வருவதாகவும், மோடி திட்டத்தின் கீழ் தண்ணீர் தொட்டி அமைத்து தருவதாகவும், அதற்கு மாடியில் தண்ணீர் தொட்டி வைக்கும் இடத்தை அளவீடு செய்ய வேண்டும் என, கூறியுள்ளனர்.நம்பிய உஷா மாடிக்கு சென்று இடத்தை காண்பித்தார். அப்போது, மறைந்திருந்த இவர்களின் கூட்டாளி வீட்டிற்குள் நுழைந்து பீரோவில் இருந்த 25 சவரன் நகை, 1 லட்சம் ரூபாய் ரொக்கத்தை கொள்ளையடித்தார். பட்டீஸ்வரம் போலீசார் விசாரணையில், வேலுார் மாவட்டம், பேர்ணாம்பட்டு அருகே சங்கராபுரம் பகுதியை சேர்ந்த வீரபத்திரன், 26, என்பவர் இந்த கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது. தனிப்படை போலீசார் அவரை கைது செய்து, 16.5 சவரன் நகைகளை பறிமுதல் செய்தனர். தலைமறைவாக உள்ள வீரபத்திரன் நண்பர்கள் இருவரை தேடி வருகின்றனர்.