அசல் ஆவணம் வழங்காத வங்கி ரூ.10 லட்சம் இழப்பீடுக்கு உத்தரவு
தஞ்சாவூர்:தஞ்சாவூர், நாஞ்சிக்கோட்டை ரோடு புதுப்பட்டினம் பகுதியை சேர்ந்தவர், சுப்பையா. இவருக்கு, மனைவி, மூன்று மகன்கள், மகள் உள்ளனர்.சுப்பையா, கடந்த 2013 டிச., 11ம் தேதி மற்றும் 2014 நவ., 18ம் தேதிகளில், தஞ்சாவூர் கத்தோலிக் சிரியன் வங்கியில், தனக்கு சொந்தமான இடம், அதில் கட்டப்பட்டுள்ள வீட்டின் ஆவணங் களை அடமானம் வைத்து, 12 லட்சம் ரூபாய் கடன் பெற்றார். இதற்காக, உரிமை மூல ஆவணங்கள் ஒப்படைப்பு பத்திரத்தை எழுதி, தஞ்சாவூர் மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்து, வங்கியில் வழங்கி இருந்தார். இந்நிலையில், 2018, மார்ச் 26ல் சுப்பையா இறந்து விட்டார். இதையடுத்து, சுப்பையா வழங்கி இருந்த அசல் ஆவணங்களை வழங்க, வங்கியிடம் கோரிக்கை வைத்தனர். ஆனால், கத்தோலிக் சிரியன் வங்கி மேலாளர், அசல் ஆவணங்களை வழங்காமல் காலம் தாழ்த்தி வந்தார்.இதனால், சுப்பையா மனைவி மற்றும் மகன்கள், தஞ்சாவூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் புகார் மனு தாக்கல் செய்தனர். அந்த மனுவை விசாரணை செய்த ஆணையம் நேற்று, 45 நாட்களுக்குள் ஆவணங்களை ஒப்படைக்க வேண்டும்; 10 லட்சம் ரூபாய் இழப்பீடு தொகையை வழங்க வேண்டும் என வங்கிக்கு உத்தரவிட்டது.