சேதுபாவாசத்திரம் அருகே, பஸ் ஸ்டாப் அமைக்க கோரிக்கை
தஞ்சாவூர்:சேதுபாவாசத்திரம் அருகே, பஸ் ஸ்டாப் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, நுாதன முறையில், குடைகளை நட்டு வைத்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டம், சேதுபாவாசத்திரம் அருகே, மரக்காவலசை பஞ்சாயத்துக்கு உட்பட்ட துறையூர் கிராமத்தில், 150 குடும்பங்கள் உள்ளன. பேராவூரணி - சேதுபாவாசத்திரம் சாலையில் இக்கிராமம் அமைந்துள்ளதால், மெயின் ரோட்டில் இருந்து தான் தினமும் பள்ளி, கல்லுாரி மற்றும் பல்வேறு பணிகளுக்காக பட்டுக்கோட்டை, பேராவூரணி, சேதுபாவாசத்திரம் ஆகிய பகுதிகளுக்கு செல்ல வேண்டும். துறையூரில் பஸ் ஸ்டாப் அமைக்க வேண்டும், என அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்தும், இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. கோரிக்கையை அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லும் வகையில், அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள், குடைகளை விரித்து வைத்து, பஸ் ஸ்டாப் என போர்டு வைத்துள்ளனர். இது குறித்து துறையூர் கிராமத்தைச் சேர்ந்த நந்தகுமார் கூறியதாவது: இந்த ஊரில் பஸ் ஸ்டாப் இல்லாததால், மழை, வெயில் காலத்தில் சாலை ஓரத்தில் உள்ள மரத்தடியில் நிற்க வேண்டும். பலமுறை கோரிக்கை விடுத்தும் பஸ் ஸ்டாப் அமைத்து தராததால், குடைகளை வைத்து பஸ் ஸ்டாப் ஏற்படுத்தி உள்ளோம். இவ்வாறு, அவர் கூறினார். குடை இருக்கு... நிழல் இருக்கா?தஞ்சாவூர் மாவட்டம், சேதுபாவாசத்திரம் அருகே மரக்காவலசை ஊராட்சியில், பஸ் நிழற்குடை அமைக்க பலமுறை கோரிக்கை விடுத்தும் மக்கள் பிரதிநிதிகள் கண்டுகொள்ளாத நிலையில், சம்பந்தப்பட்ட தொகுதி எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களுக்கு 'பெருமை' சேர்க்கும் வகையில், உள்ளூர் இளைஞர்கள் மழை, வெயிலுக்கு பிடிக்கும் குடைகளை கம்புகளில் நட்டு வைத்து, நிழற்குடை என போர்டு வைத்துள்ளனர்.