உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / பிரதமர் வீடு கட்டும் திட்ட பயனாளிகளுக்கு இரு ஆண்டுகளாக மானியம் வழங்க வில்லை பேரூராட்சி அலுவலகம் முன் போராட்டம்

பிரதமர் வீடு கட்டும் திட்ட பயனாளிகளுக்கு இரு ஆண்டுகளாக மானியம் வழங்க வில்லை பேரூராட்சி அலுவலகம் முன் போராட்டம்

ஆண்டிபட்டி: பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் வீடுகள் கட்டி முடித்த பயனாளிகளுக்கு அரசின் மானிய தொகை விடுவிக்க வலியுறுத்தி ஆண்டிபட்டி பேரூராட்சி அலுவலகம் முன்பு அமர்ந்து போராட்டம் நடத்தினர்.பிரதமர் வீட்டு வசதி திட்டத்தில் 2021--2022ம் ஆண்டில் ஆண்டிபட்டி பேரூராட்சி பகுதியில் 61 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டனர். இதில் 47 பேர் அரசின் வழிகாட்டு விதிமுறைகளுக்கு உட்பட்டு வீடுகள் கட்டத் துவங்கினர். அரசு மானியமாக தலா ரூ.2.10 லட்சம், பயனாளி பங்குத் தொகையாக ரூ.1.05 லட்சம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கட்டுமான பணியில் நான்கு தவணைகளாக பயனாளிகளுக்கு அரசு மானியம் வழங்க வேண்டும். அரசு மூலம் கிடைக்க வேண்டிய மானியம் தாமதம் ஆனதால் பயனாளிகள் தங்கள் சொந்த பொறுப்பில் பணத்தை தயார் செய்து வீடுகளை கட்டி முடித்து விட்டனர். வீடுகள் கட்டி முடித்து இரு ஆண்டுகளாகியும் பயனாளிக்கு மானிய தொகை கிடைக்கவில்லை. பயனாளிகள் பலமுறை அலுவலகத்தில் தொடர்பு கொண்டு முறையான பதில் கிடைக்கவில்லை. நேற்று பேரூராட்சி அலுவலகம் முன்பு இந்திய கம்யூ., கட்சியைச் சேர்ந்த பேரூராட்சி 10 வது வார்டு கவுன்சிலர் மீனாட்சி தலைமையில் 10க்கும் மேற்பட்ட பயனாளிகள் தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். பேரூராட்சி செயல் அலுவலர் ஆளவந்தான் பேச்சு வார்த்தையில் இரு நாட்களில் இதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்ததை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ