உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மேகமலையில் சூழல் சுற்றுலாத் திட்டம் செயல்படுத்தப்படுமா: சுற்றுலாப் பயணிகள் எதிர்பார்ப்பு

மேகமலையில் சூழல் சுற்றுலாத் திட்டம் செயல்படுத்தப்படுமா: சுற்றுலாப் பயணிகள் எதிர்பார்ப்பு

மேகமலை, புலிகள் காப்பகமாக மாறிய பின் வனத்துறை கெடுபிடிகளை அதிகரித்துள்ளது. அதேசமயம் வரும் சுற்றுலா பயணிகளுக்கு எந்தவித இடையூறுகளும் செய்வது இல்லை. மாலை 5:00 மணியுடன் ஹைவேவிஸ் ரோடு மூடப்படுவதால், அதற்குள் வந்துவிட அறிவுறுத்துகின்றனர். மேகமலை பகுதியில் சூழல் சுற்றுலாவிற்கு அனுமதிக்க வனத்துறை பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியானது. ஆனால் நடவடிக்கை எதுவும் இதுவரை எடுக்கப்படவில்லை.ஹைவேவிஸ், மணலாறு, வெண்ணியாறு, இரவங்கலாறு, மகாராசா மெட்டு உள்ளிட்ட பகுதிகளை உள்ளடக்கியதாக இந்த சூழல் சுற்றுலா இருக்க வேண்டும். உட்காருவதற்கான இருக்கைகள், பார்க், பயணம் செய்ய பேட்டரி கார்கள், மணலாறு அணையில் படகு சவாரி, சாப்பிடுவதற்கான ஓட்டல், தங்கும் விடுதி, 'டிரக்கிங்' என பல வசதிகள் செய்தால் சுற்றுலாப் பயணிகள் மூணாறுக்கு இணையாக வரத் துவங்குவர்.தேக்கடி, பெரியாறு புலிகள் காப்பகத்தில் இருப்பது போன்று சூழல் சுற்றுலாவை செயல்படுத்த வேண்டும். அதற்கான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு வருவதாக வனத்துறையினர் தெரிவித்துள்ள நிலையில், தமிழக அரசு மேகமலையை சுற்றுலா தலமாக அறிவித்துள்ளது. இருந்தபோதும் புலிகள் காப்பகமாக மாறியுள்ளதால் வனத்துறையின் கட்டுப்பாட்டில் தான் சுற்றுலா நடவடிக்கைகள் இருக்க வேண்டும் என்பதால், தற்போது சூழல் சுற்றுலாவை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம் இத்துறைக்கு நல்ல வருவாய் கிடைக்கும். வனப்பகுதிகளில் மேம்பாடு, வன உயிரினங்களின் பாதுகாப்பிற்கு இந்த நிதியை பயன்படுத்த முடியும். எனவே மேகமலை சூழல் சுற்றுலா திட்டத்தை செயல்படுத்த வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இயற்கை ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதன் மூலம் நீண்டகால கோரிக்கைக்கு விடிவு ஏற்படுவதுடன், சுற்றுலா பயணிகளுக்கு ஒரு சொர்க்க பூமியாக மேகமலை திகழும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ