உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மக்காச்சோள சாகுபடிக்கு மானியம் அதிகரிக்க நடவடிக்கை தேவை

மக்காச்சோள சாகுபடிக்கு மானியம் அதிகரிக்க நடவடிக்கை தேவை

கம்பம்: மக்காச்சோள சாகுபடி பரப்பை அதிகரிக்க விவசாயிகளுக்கு வழங்கும் மானிய குறியீட்டை அதிகரிக்க வேளாண் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.மக்காச் சோள சாகுபடி பரப்பு,உற்பத்தியை அதிகரிக்க தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரம் மானியம் வழங்கப்படுகிறது. ஒரு எக்டேருக்கு ரூ.2500 மதிப்புள்ள 10 கிலோ விதை, ரூ.300 மதிப்புள்ள நுண்ணுட்ட உரங்கள் , ரூ.3 ஆயிரம் மதிப்புள்ள வேளாண் இயற்கை இடு பொருள்கள், ரூ.500 மதிப்புள்ள ஒரு லிட்டர் நானோ திரவ உரம், இதர செலவினங்களுக்கு ரூ.500 என ரூ.6550 வழங்கப்படுகிறது.தேனி மாவட்டத்தில் உள்ள எட்டு வட்டாரங்களுக்கும் ஒவ்வொரு வட்டாரத்திற்கும் தலா 50 எக்டேருக்கு மட்டும் இந்த மானியம் அனுமதிக்கப்படுகிறது. கம்பம் வட்டாரத்திற்கு மிக குறைந்த அளவான 5 எக்டேருக்கு மட்டுமே இந்தாண்டு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இதனால் குறைந்தளவு விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்படுகிறது.மக்காச் சோளம் 160 நாட்களில் அறுவடை செய்யலாம். எக்டேருக்கு 10 முதல் 15 டன் மகசூல் கிடைக்கும். குவிண்டால் ரூ.2500 வரை விலை கிடைக்கும். 90 நாட்களிலேயே தட்டையை அறுத்து கேரளாவிற்கு யானைகள், கால்நடை தீவனத்திற்கு நல்ல விலைக்கு விற்கலாம் . எனவே மக்காச் சோளம் சாகுபடி பரப்பை அதிகரிக்க விவசாயிகளை ஊக்குவிக்க வேண்டும். மானாவாரி, இறவை பாசனத்தில் சாகுபடி செய்யலாம். தோட்ட விவசாயிகளையும் ஊக்குவிக்க வேளாண் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.இது பற்றி வேளாண் துறையினர் கூறுகையில், மக்காச்சோள பயிரில் படைப்புழு தாக்குதலுக்கு பயந்து விவசாயிகள் சாகுபடி செய்ய தயங்குகின்றனர். கம்பம் பள்ளத்தாக்கில் காய்கறி, வாழை திராட்சை விரும்பி சாகுபடி செய்கின்றனர். மானாவாரியில் மொச்சை,துவரை, தட்டை சோளம் பயிடுகின்றனர். இருந்தாலும் மக்காச் சோளம் சாகுபடி செய்ய ஊக்குவித்து வருகிறோம், என்றனர். இணை இயக்குநர் ஒவ்வொரு வட்டாரத்திற்கும் வழங்கும் மானிய குறியீட்டை அதிகரித்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை