டிராக்டர் உரிமையாளர்களுக்கு வேளாண் பொறியியல் துறை அழைப்பு
தேனி; 'விவசாய பயன்பாட்டிற்காக டிராக்டர் வைத்துள்ளவர்கள், 'உழவன் செயலி'யில் பதிவு செய்து கொள்ளலாம்.' என, வேளாண் பொறியியல் துறையினர் அழைப்பு விடுத்துள்ளனர்.அத்துறை அலுவலர் ஒருவர் கூறியதாவது: பெருநகரங்களில் கார், ஆட்டோ 'புக்' செய்வது போல் விவசாய பயன்பாட்டிற்காக, 'உழவன்' செயலி மூலம் டிராக்டர் உள்ளிட்டவை பதிவு செய்யும் முறை அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. விவசாய பயன்பாட்டிற்காக டிராக்டர் வைத்துள்ள உரிமையாளர்கள் 'உழவன்' செயலி'யில் தனியார் வாடகை வாகனங்கள் என்ற பிரிவில் டிராக்டர் உரிமையாளர்கள் தங்கள் வாகனத்தை பதிவு செய்யலாம்.அப்போது அலைபேசி எண், ஆதார், வாகனம் தொடர்பான ஆவணங்கள், வங்கி கணக்கு விபரங்கள், டிரைவர் விபரங்கள் உள்ளிட்டவற்றை பதிவு செய்ய வேண்டும். இதனை துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்வார்கள். வட்டாரம் வாரியாக விவசாயிகள் தேவைபடும் போது இந்த வாகனங்களை வேளாண் பயன்பாட்டிற்காக பதிவு செய்து கொள்ளலாம். பணம் செலுத்துவதும் வங்கி கணக்கின் மூலம் பணம் செலுத்த வேண்டும். விரைவில் நெல், கரும்பு அறுவடை இயந்திரங்கள் உள்ளிட்ட வாகனங்கள் இந்த செயலி'யில் பதிவு செய்ய அறிவிப்பு வெளியாகலாம். விருப்பமுள்ள டிராக்டர் உரிமையாளர்கள் தேனி, உத்தமபாளையத்தில் உள்ள வேளாண் பொறியியல் துறை உதவி பொறியாளர் அலுவலகங்களை நேரில் அணுகலாம்., என்றார்.