தேனியில் போக்குவரத்து மாற்றம் ரத்தானதால் பயணிகள் நிம்மதி
தேனி : தேனி நகர்பகுதியில் செய்யப்பட்டிருந்த போக்குவரத்து மாற்றம் நேற்று வாபஸ் பெறப்பட்டது. இதனால் பஸ்கள் மட்டும் மீண்டும் பழைய பஸ் ஸ்டாண்டிற்குள் சென்றன. இதனால் பயணிகள் நிம்மதியடைந்தனர். போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகளை நிரந்தமாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தேனி நகர்பகுதி வழியாக கொச்சி-தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. தேனி பழைய பஸ் ஸ்டாண்ட், நேருசிலை அதனை சுற்றி உள்ள பகுதிகளில் எப்போதும் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. சாலை பாதுகாப்பு குழு பரிந்துரையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் பரிசோதனையாக நேரு சிலை அருகில் பயன்பாட்டில் இருந்த போக்குவரத்து சிக்னல் ஆக.,10 முதல் நிறுத்தப்பட்டது.இதனால் மதுரைரோடு, பெரியகுளம் ரோட்டில் இருந்து கம்பம் ரோடு செல்லும் அனைத்து வாகனங்களும் பழைய பஸ் ஸ்டாண்ட் வழியாக செல்ல அறிவுறுத்தப்பட்டது. இதனால் கம்பம் ரோட்டில் இருந்து மதுரை ரோடு சென்ற வாகனங்கள், பெரியகுளம் ரோட்டில் இருந்து கம்பம் ரோட்டிற்கு சென்றன. இதனால் பஸ் பயணிகள் நடுரோட்டில் இறக்கி விடுவதும், வாகனங்கள் அடிக்கடி இடித்து கொள்வதும், பஸ்களில் ஏறமுடியாமல் பயணிகளும், ரோட்டை கடக்க முடியாமல் முதியவர்கள் சிரமமப்பட்டனர்.மீண்டும் பழைய நடைமுறையில் போக்குவரத்து அனுமதிக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு வியாபாரிகள், சமூக ஆர்வலர்கள், அரசியல் கட்சியினர் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் நேற்று காலை டி.எஸ்.பி., பார்த்தீபன் தலைமையிலான போலீசார் ரோட்டில் இருந்த இரும்பு தடுப்புகளை அகற்றினர். வழக்கம் போல் சிக்னல் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டு, போக்குவரத்தில் பழைய நடைமுறை அதாவது பஸ்கள் மட்டும் பழைய பஸ் ஸ்டாண்டிற்குள் செல்ல அறிவுறுத்தப்பட்டது.பஸ் ஸ்டாண்டிற்குள் ஆட்டோ உள்ளிட்ட மற்ற வாகனங்கள் நுழைய அனுமதிக்க கூடாது. முக்கிய ரோடுகளில் இடையூறுகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.