| ADDED : ஆக 03, 2024 05:28 AM
தேனி: தேனி அருகே முத்துதேவன்பட்டியில் வீட்டு வசதி வாரியத்தால் ரூ.13.14 கோடி செலவில் முழுவதும் ஏ.சி., வசதியுடன் கட்டப்பட்ட சமுதாய கூடம் பயன்பாடின்றி காட்சி பொருளாக உள்ளது. தேனி வீரபாண்டி ரோட்டில் பட்டுவளர்ச்சித்துறை அலுவலகம் அருகே வீட்டு வசதி வாரியத்தால் ரூ.13.14 கோடி செலவில் 3300 ச.அடி பரப்பில் சமுதாய கூடம் கட்டப்பட்டது. இந்த கூடம் அரண்மனை தோற்றத்தில் முழுவதும் ஏ.சி., வசதியுடன் 800 பேர் அமரும் வசதி, சாப்பாட்டு ஹாலில் 350 பேர் பயன்படுத்தும் வசதி, கழிப்பறைகள், பார்கிங் வசதியுடன் அமைக்கப்பட்டது. இதனை 2023 ஏப்ரலில் முதல்வர் ஸ்டாலின் காணொளி மூலம் திறந்து வைத்தார்.சமுதாய கூடம் திறந்த பின் மகளிர் உரிமைத்தொகை நிகழ்ச்சி, அமைச்சர் உதயநிதி பங்கேற்ற நிகழ்ச்சி என இதுவரை 3 அரசு நிகழ்ச்சிகள் மட்டும் நடந்துள்ளது. பல கோடிகளில் கட்டிய சமுதாய கூடம் காட்சி பொருளாக மட்டும் ஓராண்டாடுக்கு மேலாக காட்சியளிக்கிறது. இதனை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். என கோரிக்கை எழுந்துள்ளது.வீட்டு வசதி வாரிய அலுவலர்கள் கூறுகையில், 'சமுதாய கூடத்தை ஆண்டிற்கு ரூ.57 லட்சத்திற்கு டெண்டர் விட அறிவிப்பு செய்யப்பட்டது. யாரும் டெண்டர் கோரவில்லை. வாரியம் மூலம் பராமரிப்பு பணிகள் மேற்கொள்வது சிரமம் என்பதால் மீண்டும் டெண்டர் விடுவதற்கான பணிகள் நடந்து வருகிறது', என்றனர்.