விழித்துக் கொள்ளுங்கள் மாணவர்களே
-பாலகுருசாமிமுன்னாள் துணைவேந்தர்தேசிய கல்விக் கொள்கையின் முக்கிய நோக்கம் தார்மீக, நெறிசார்ந்த, அறிவார்ந்த, வலிமையான இளைஞர் சக்தியை உருவாக்கி நாட்டை அடுத்த கட்ட வளர்ச்சிக்கு கொண்டு செல்வது தான். எதிர்காலத்தில் நான்காம் தொழிற்புரட்சி சூழலில் உருவாகும் சவால்களை எதிர்கொள்வதற்கான கல்வி தரம், புதுமையாக்கம், ஆய்வு மனப்பான்மை இக்கொள்கையில் உள்ளன.தமிழகத்தில் நிலவுவது போல் இக்கொள்கையை ஏற்றுக்கொண்டால் கட்டாயம் ஹிந்தி படிக்க வேண்டும் என்பது இல்லை. அரசியல் சட்டத்தில் அட்டவணையிடப்பட்ட ஏதாவது ஒரு இந்திய மொழியை மூன்றாவது மொழியாகக் கற்பிக்க பரிந்துரை செய்கிறது அவ்வளவு தான். திராவிட மாடல் அரசு எனக் கூறிக்கொள்ளும் தமிழகத்தில் திராவிட மொழிகளான தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை மாணவர்கள் கற்கலாம். இது அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கும் நடவடிக்கையாகும். தமிழகத்தில் 25 சதவீதம் பேர் தெலுங்கு பேசுவோர் உள்ளனர். அதுபோல் கன்னடம், மலையாளம் பேசுவோரும் கணிசமாக வசிக்கின்றனர். மும்மொழித் திட்டம் மூலம் இவர்கள் தங்களது தாய்மொழிகளை கற்க வழிசெய்யும்.மும்மொழித் திட்டத்தின் பாராட்டத் தக்க அம்சங்களில் ஒன்று நாட்டில் உள்ள பல மொழிகள் கொண்ட கட்டமைப்பு சீராக இருப்பதை உறுதி செய்வது ஆகும். பல்வேறு பண்பாடுகள், மொழிகள் இருப்பது நம் நாட்டின் வரப்பிரசாதமாகும். எனவே, பல மொழிகளை கற்பதற்கு இது நல்ல வாய்ப்பாக அமையும். குறுகிய அரசியலுக்காக ஒருவரை குறுக்கிவிடாமல், அவரது அடித்தளத்தை விரிவு செய்யும். வேண்டாம் இரட்டை வேடம்
தமிழ் நீங்கலாக வேறொரு இந்திய மொழியை மாணவர்கள் கற்றுக் கொள்வதை 60 ஆண்டுகளுக்கு மேல் தடுத்து வரும் ஒரே மாநிலம் தமிழகம். இருமொழிக் கொள்கைகள் போதும் என்பதால் ஏழைகள், கிராமப்புற எளிய குடும்பங்களை சேர்ந்த மாணவர்களுக்கு கூடுதலாக ஒரு மொழியைக் கற்கும் வாய்ப்பு மறுக்கப்படுகிறது. மத்திய அரசுப் பள்ளிகளிலும் தனியார் பள்ளிகளிலும் சி.பி.எஸ்.இ., பாடத் திட்டத்தில் சேரும் பணக்கார, நகர்ப்புற மாணவர்கள் தாங்கள் விரும்பும் எந்த மொழியையும் கற்கும் உரிமையை பெறுகிறார்கள். மும்மொழித் திட்டத்தை எதிர்ப்போரின் பேரக் குழந்தைகள், கொள்ளுப் பேரக் குழந்தைகள் ஹிந்தியை எவ்வித தடையுமின்றி மகிழ்ச்சியாக கற்கின்றனர் அல்லது கற்றார்கள். பல தலைவர்கள் சி.பி.எஸ்.இ., பள்ளிகள் நடத்துகின்றனர் என்பதும் மக்களுக்கு தெரிய வருகிறது. பெரும்பாலான அரசியல் தலைவர்கள் பேசுவது, தேசிய கல்விக் கொள்கையின் உண்மையான நோக்கத்தை சரியாகப் புரிந்துகொள்ளவில்லை அல்லது அரசியல் நோக்கமாக இருக்கலாம். இது மிகவும் வேடிக்கையானது. தமிழக அரசியல் தலைவர்கள், குறிப்பாக புதிய தலைவர்கள் எதையும் தர்க்கப் பார்வையுடன், காரண காரிய அடிப்படையில் அல்லது ஆய்வு நோக்கத்துடன் அணுகுவதில்லை. மக்களை ஏமாளிகளாக்குவதற்கு எளிய வழியை மேற்கொள்கின்றனர். இத்தகைய குறுகிய பார்வையுள்ள தலைவர்கள், கல்வியின் தரத்தை பற்றியோ அல்லது பல்லாயிரம் மாணவர்களின் தேவைக்கான அறிவார்ந்த அணுகுமுறை குறித்தோ கவலைப்படுவதில்லை. எனவே, சுயலாபத்துக்காக 'வாக்கு வங்கி அரசியலில்' ஈடுபடும் இந்த அரசியல்வாதிகளின் மாய்மாலத்துக்கு மக்கள் இரையாகிவிடாதீர்கள். குறிப்பாக மாணவர்கள் விழித்துக்கொள்ளுங்கள். இந்தியாவின் தொலைநோக்கு திட்டம்
--லேகாகல்வியாளர், அல்லிநகரம்தேசிய மும்மொழி கல்வி கொள்கை வருங்கால இந்தியாவிற்கான தொலை நோக்குத் திட்டம். எதிர்கால இந்தியாவின் இளைய சமுதாயத்தினர் பன்முக திறன் பன்மடங்கு அதிகரிக்கும். மாநிலத்தில் 10 ஆயிரத்திற்கு அதிகமான மெட்ரிக் பள்ளிகளில் முதல் வகுப்பு முதல் 5 ம் வகுப்பு வரை தமிழ்,ஆங்கில மொழியுடன் ஹிந்தியும் கற்பிக்கப்படுகின்றன. மாணவர்களின் பெற்றோர்களும் விரும்புகின்றனர். இளைஞர்கள் மாநிலம் கடந்து பணியாற்ற பன் மொழி திறன் அவசியம். ஒரு மொழியை கற்றுக் கொள்வதால் நம் தாய்மொழியான தமிழ் ஒரு போது அதன் தொன்மை அழியாது. தமிழ், தமிழர் கலாச்சாரம், பண்பாடு எல்லாம் கெட்டு விடும் எனக்கூறுவது அபத்தம். மாணவர்கள் ஹிந்தி மட்டும் அல்ல, மலையாளம், கன்னடம், தெலுங்கு, பிரெஞ்ச், சைனிஷ் உள்ளிட்ட மொழிகளையும் கற்றுக் கொள்கிறார்கள். மும்மொழி கொள்கை இளம் தலைமுறையினருக்கு தேவையானது. எந்த மொழியாலும் தமிழை ஆதிக்கம் செய்ய முடியாது
-இராமநாதன்பேராசிரியர் (ஒய்வு), கம்பம்கல்வியில் அகில இந்திய அளவில் தமிழகம் முன்னணி மாநிலமாக உள்ளது. மத்திய அரசின் மும்மொழி கொள்கையில் மூன்றாவது மொழியாக ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், சமஸ்கிருதம் என பட்டியல் உள்ளது. இதைத் தான் படிக்க வேண்டும் என்று மத்திய அரசு கட்டாயப்படுத்தவில்லை. ஏதாவது ஒரு மொழியை தேர்வு செய்யலாம். எனவே இங்கு திணிப்பு என்ற பேச்சு இல்லை. தமிழ் இலக்கியம், இலக்கணம் செறிந்த மொழி . எந்த மொழியாலும் தமிழை ஆதிக்கம் செய்ய முடியாது. ஏற்கெனவே தமிழகத்தில் 60 சதவீத மெட்ரிக் , சி.பி.எஸ்.இ .,பள்ளிகளில் ஹிந்தி கற்பிக்கப்படுகிறது. அரசு பள்ளிகளில் தான் அந்த வசதியில்லை. அந்த வசதியை ஏற்படுத்தி தர வேண்டும். ஏற்கெனவே தென் மாநிலங்களில் தமிழகம் தவிர்த்து பிற மாநிலங்களில் மும்மொழி கல்வி உள்ளது. வசதியான மாணவர்களுக்கு கிடைக்கும் வாய்ப்பு ஏழை மாணவர்களுக்கும் கிடைப்பதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும். கல்வியில் அரசியல் வேண்டாம்
- ராமகிருஷ்ணன், பேராசிரியர், பெரியகுளம்முக்கனியின் சுவையாக மூன்றாவது மொழியாக ஹிந்தியை பார்க்கிறேன். ஹிந்தி கற்காமல் நான் சிரமப்பட்டேன். அதனை கற்றபிறகு எதிலும் முன்னேறாலாம். மொழி வளர்ச்சிக்கு தடை போடுவது தவறு. சென்னையை விட்டு கடந்து சென்றாலே ஹிந்தியில் பேசுகின்றனர். நமது பர்சில் பணம் அதிகம் இருந்தால் மனதில் தெம்பு வருவது போல், இரு மொழியுடன் கூடுதலாக மூன்றாவது மொழி ஹிந்தி கற்கும் மாணவர்கள் சாதனைகளை படைப்பார்கள். கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பில் எனது நண்பர்கள் ராணுவ வீரர்களுடன் நடந்த கலந்துரையாடலில் ஹிந்தி மொழியின் அருமை, பெருமைகளை பேசினர். இதனால் என் பிள்ளைகளை ஹிந்தி வகுப்பில் சேர்த்துள்ளேன். எத்தனை நாளைக்கு தான் தேய்ந்த ரிக்கார்டு போல் ஹிந்தி எதிர்ப்பு கோஷம். மாணவர்கள் படிப்பில் அரசியல் வேண்டாம். பிஞ்சு மனதில் நஞ்சை கலக்காதீர்கள். மூன்றாவது மொழி அறிவுத்திறனை மேம்படுத்தும்
-அலமேலுபேராசிரியை, போடிதேசிய கல்விக் கொள்கையில் தாய் மொழி தமிழ் இருக்க வேண்டும். அதன் பின் மூன்றாவது மொழியாக மாணவர்கள் விருப்ப மொழி கொண்டு வருவதால் அடிப்படை கல்வி தரமாக இருக்கும். மாணவர்கள் உயர்நிலை, மேல்நிலை, உயர்கல்வி கற்க மூன்றாவது மொழி தேவை. அப்போதுதான் ரயில்வே, ஸ்டாப் செலக்சன், ஐ.ஏ.எஸ்., உள்ளிட்ட தேர்வுகளை சிரமம் இன்றி எழுதவும், மத்திய அரசு வேலைவாய்ப்பு பெற உதவும். ஹிந்தி, மலையாளம் உள்ளிட்ட மற்ற மொழிகளை கற்றுக் கொள்வது நல்லது. கேரளாவில் தேசிய கல்விக் கொள்கையை அமல் படுத்திய நிலையில் மலையாளம், ஆங்கிலத்துடன் தமிழ், ஹிந்தி விருப்பம் படமாக கற்றுத் தரப்படுகிறது. இதுபோல தமிழகத்தில் விருப்பம் மொழியாக ஹிந்தி, மலையாளம் மொழிகளை அரசு பள்ளிகளிலும் தரமாக கற்றுத்தர வேண்டும். இதன் மூலம் மாணவர்கள் அறிவு திறன் மேம்படுத்த பயன்படும். மொழி வேறு அரசியல் வேறு
-மீனாட்சிசுந்தரம்கல்வியாளர், ஆண்டிபட்டிஒரு மொழியை கற்றுக் கொள்வதால் அதிக பலனே தவிர குறை ஏதுமில்லை. தமிழ் மட்டும் கற்பதால் பிரயோஜனம் இல்லை. மொழி வேறு அரசியல் வேறு. மொழியை அரசியல் ஆக்கி மாணவர்கள் எதிர்காலத்தை கெடுக்கக் கூடாது. மத்திய அரசு ஹிந்தியை திணிக்கவில்லை. மூன்றாவதாக விரும்பிய ஒரு மொழியை படிக்க சொல்கிறது. இதில் என்ன தவறு. இன்னொரு மொழி தெரிவதால் படிப்பு, வேலை வாய்ப்பு அதிகம் கிடைக்கும். புதிய மொழி தெரிந்து கொள்வதால் அந்த மொழி பேசுபவர்களின் பண்பாடு கலாச்சாரம் குறித்து அறிய முடியும். சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தை அரசு பள்ளிகளில் கொண்டு வருவதால் அரசு பள்ளிகளின் தரம் உயரும். தரமான கல்வி கிடைக்கும். நீட் தேர்வு குறித்து பயம் தேவையில்லை. வெளிநாட்டில் இருந்து மாற்று மொழி பேசிய பலர் தமிழ் படித்து அறிஞர்களாகி உள்ளனர். அன்றைக்கு தமிழ் மொழி கற்க கூடாது என்று அவர்களை தடுத்திருந்தால் பல அறிஞர்களை இழந்திருப்போம்.