தேவதானப்பட்டி:தேனி மாவட்டம், தேவதானப்பட்டி அருகே டி.காமக்காபட்டி சோதனை சாவடியில் தேனி, திண்டுக்கல் மாவட்ட போலீசார் இணைந்து சோதனை நடத்தி வருகின்றனர். ஜூலை 2 அதிகாலை போலீஸ்காரர் நரேந்திரசிங், 41, செல்வராஜா, கார்த்திக் ஆகியோர் டூ-வீலர்களை நிறுத்தி சோதனை செய்து கொண்டிருந்தனர். அப்போது டூ-வீலரில் வந்த ஒருவர் சோதனை சாவடியில் நிற்காமல், கொடைக்கானல் ரோட்டில் வேகமாக சென்றார். அவரை பிடிக்க முயன்ற போலீஸ்காரர் நரேந்திரசிங், சோதனைக்காக நிறுத்தியிருந்த, மதுரை காளிதாஸ் என்பவரின் டூ-வீலரை எடுத்துச் சென்று, விரட்டி பிடித்தார்.அந்த நபரை இழுத்தபடி நரேந்திர சிங், சோதனை சாவடி நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது, திடீரென அந்த நபர், போலீஸ்காரரை கீழே தள்ளி, அருகில் கிடந்த, அவர் ஓட்டி வந்த டூ-வீலரை பறித்து தப்பினார். மர்மநபர் முதலில் ஓட்டிச் சென்ற டூ-வீலர், திண்டுக்கல் மாவட்டம்,அம்மையநாயக்கனுார் போலீஸ் ஸ்டேஷன் பகுதியில் திருடு போனது என விசாரணையில் தெரியவந்தது. சோதனை சாவடியில் போலீசாரிடமே டூ-வீலரை பறித்து சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் மர்ம நபரை பிடிக்க தேவதானப்பட்டி எஸ்.ஐ., மணிகண்டன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.போலீஸ் விசாரணையில், அந்த நபர், மதுரை அசோக்நகர், நாராயணகுரு மஹால் ரோட்டைச் சேர்ந்த பொன்னுச்சாமி மகன் செல்வேந்திரன், 21, என்பது, நேற்று தெரிந்தது. அவரை போலீசார் கைது செய்து, விசாரிக்கின்றனர்.