| ADDED : ஜன 11, 2024 04:28 AM
கூடலுார் : சபரிமலை தரிசனம் முடிந்து திரும்பும் ஐயப்ப பக்தர்களுக்கு குமுளியில் இரவில் கூடுதல் பஸ் வசதி வேண்டுமென வலியுறுத்தி உள்ளனர்.இந்த ஆண்டு சபரிமலைக்கு வருகை தரும் ஐயப்ப பக்தர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது. தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து வாகனங்கள் மூலமும், பாதயாத்திரையாகவும், பஸ்களிலும் அதிகம் வருகின்றனர். சபரிமலையில் கூட்ட நெரிசலில் சிக்கி பல மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்து திரும்புகின்றனர்.மகரஜோதி விளக்கு பூஜை ஜன. 15ல் நடைபெறுவதை முன்னிட்டு பக்தர்களின் கூட்டம் மேலும் அதிகரித்துள்ளது. சபரிமலையில் தரிசனம் முடிந்து சொந்த ஊருக்கு திரும்பும் ஐயப்ப பக்தர்கள் குமுளியில் இரவு நேர பஸ் வசதியின்றி பல மணி நேரம் காத்திருந்து மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் அவ்வப்போது பெய்யும் சாரல் மழையால் ஒதுங்கி நிற்க கூட இடமின்றி மன உளைச்சலில் புலம்புகின்றனர். அதனால் மகரஜோதி விழா முடியும் வரை இரவில் பஸ் வசதியை அதிகப்படுத்த அரசு போக்குவரத்து கழகம் முன்வர வேண்டும் என ஐயப்ப பக்தர்கள் வலியுறுத்தியுள்ளனர்.