| ADDED : பிப் 13, 2024 05:11 AM
தேனி : தேனியில் தடை செய்யப்பட்ட கேரள, நாகலாந்து மாநில லாட்டரி சீட்டு விற்பனையில் 400 ஏஜன்ட்கள் ஈடுபட்டுள்ளனர். ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்தை சுரண்டும் லாட்டரி விற்பனையை சிவபிரசாத் எஸ்.பி., தடுத்து நிறுத்த கோரிக்கை எழுந்துள்ளது.மாவட்டம் முழுவதும் அரசால் தடை செய்த பிற மாநில லாட்டரி சீட்டு விற்பனை தங்கு தடையின்றி அமோகமாக நடந்து வருகின்றனர். தேனியில் கூலித்தொழிலாளர்களை குறிவைத்து ஒரு எண் முதல் நான்கு இலக்க எண் கொண்ட லாட்டரி சீட்டுகள் ரூ.15 முதல் ரூ.120 வரை விலையில் விற்கப்படுகிறது. இந்த லாட்டரி விற்பனை பெரியகுளம் ரோடு மெடிக்கல் சந்து, திட்டச்சாலை, புது பஸ் ஸ்டாண்டு, பழைய பஸ் ஸ்டாண்டு, ஜமின்தார் காம்ப்ளக்ஸ் பின்பகுதி, பொம்மையக்கவுண்டன்பட்டி பாலன்நகர், அல்லிநகரம் பள்ளிவாசல் தெரு, வி.எம்.சாவடித் தெரு, ஜி.ஹெச்., ரோடு, திட்டச்சாலை, துவரைக்களம் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட இடங்களில் அமோகமாக நடக்கிறது. லாட்டரி விற்பனையில் 400 ஏஜன்ட்டுகள் ஈடுபட்டுள்ளனர். லாட்டரி சீட்டு குலுக்கல் முடிவுகள் மதியம் 1:00, 3:00, மாலை 6:00, இரவு 8:00 மணி என நான்கு முறை ரிசல்ட் ஆன் லைனில் வெளியாகிறது. இதனை விற்பனையாளர்கள் நோட்டில் குறித்து வைத்து லாட்டரி வாங்கியவர்களுக்கு டோக்கன் கொடுக்கின்றனர். ரிசல்டுகளை அறிய கூட்டம் கூட்டமாக குறிப்பிிட்ட நேரங்களில் கூடுகின்றனர். சிலருக்கு பரிசு தொகை விழுந்ததாக கூறி கமிஷனை எடுத்து கொண்டு பணம் வழங்குகின்றனர். பரிசு பணம் பெறுபவர்களை பார்த்து பணத்தை இழந்த பலர் பணம் கடன் வாங்கி லாட்டரி சீட்டு வாங்குகின்றனர். தேனியில் கொடிகட்டி பறக்கும் லாட்டரி விற்பனையால் கடந்த 6 மாதங்களில் வாழ்வாதாரத்தை இழந்த 12 தொழிலாளர்கள்,விவசாயிகள் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு காப்பாற்றப்பட்டுள்ளதாக கூறுகின்றனர். அரசியல் பிரமுகர்கள், போலீசாருக்கு மாதந்தோறும் கவனிப்பு நடப்பதால் லாட்டரி விற்பனை கண்டும் காணது போல் நடந்து கொள்கின்றனர் என புகார் எழுந்துள்ளது. கடும் நடவடிக்கை தேவைஇதுகுறித்து தேனி வழக்கறிஞர் கார்த்திகை தீபா கூறுகையில், ‛லாட்டரி மாபியாக்கள் ஏழைகளின் வாழ்வாதாரத்தை சுரண்டி விற்பனை செய்கின்றனர். லாட்டரி முடிவுகள் தினமும் 4 முறை 'டியர்' என்ற குறியீட்டு சொல்லால் அறிவிக்கின்றனர். அரசியல்வாதிகள், போலீசாருக்கும் கவனிப்பால் இதனை போலீஸ் கண்டு கொள்வது இல்லை. இதனால் பல ஏழை குடும்பங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளன. மாவட்டத்தில் லாட்டரி விற்பனையை தடுக்க சிவபிரசாத் எஸ்.பி., நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.