உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / தேனியில் அரசு நிலத்தை அபகரித்த செங்கல் சூளை உரிமையாளர் கைது சி.பி.சி.ஐ.டி., போலீசார் நடவடிக்கை

தேனியில் அரசு நிலத்தை அபகரித்த செங்கல் சூளை உரிமையாளர் கைது சி.பி.சி.ஐ.டி., போலீசார் நடவடிக்கை

தேனி:தேனியில் அரசு நிலத்தை அபகரித்த வழக்கில் ஏற்கனவே தாசில்தார் உட்பட 11 பேர் கைதாகி ஜாமினில் உள்ள நிலையில், வடவீரநாயக்கன்பட்டியில் உள்ள அரசு நிலத்தை பத்திரவு பதிவு செய்து கொடுத்த பின்னத்தேவன்பட்டி மேற்குத் தெருவை சேர்ந்த செங்கல் சூளை உரிமையாளர் ஈஸ்வரனை 46, சி.பி.சி.ஐ.டி., போலீசார் கைது செய்தனர்.இம்மாவட்டத்தில் அரசு நில அபகரிப்பு குறித்து பெரியகுளம் முன்னாள் சப்கலெக்டர் ரிஷப் விசாரித்தார். இதில் வடவீரநாயக்கன்பட்டியில் ரூ.1.44 கோடி மதிப்பிலான 109 ஏக்கர், தாமரைக்குளத்தில் ரூ.60.55 லட்சம் மதிப்பிலான 60 ஏக்கர், கெங்குவார்பட்டியில் ரூ.8.62 கோடி மதிப்புள்ள 13 ஏக்கர் அரசு நிலம் என 182 ஏக்கர் அரசு நிலம் அதிகாரிகள் துணையுடன் அபகரிக்கப்பட்டது தெரிய வந்தது. இந்த நிலங்களுக்கு வழங்கப்பட்டிருந்த பட்டாக்கள் ரத்து செய்யப்பட்டு அரசுடமையாக்கப்பட்டன.இந்நிலங்கள் 'அ' பதிவேட்டில் கணினி மூலம் திருத்தப்பட்டு, மோசடியாக பட்டா வழங்கப்பட்டதும், அதன் மூலம் அபகரிக்கப்பட்டதும், அதற்கு அதிகாரிகள் உடந்தையாக இருந்ததும் தெரியவந்தது.இதுதொடர்பாக 2021 டிச., 25ல் பெரியகுளத்தில் ஆர்.டி.ஓ.,க்களாக பணிபுரிந்த ஜெயப்பரிதா, ஆனந்தி, தாசில்தார்கள் ரத்தினமாலா, கிருஷ்ணகுமார், அ.தி.மு.க.,முன்னாள் ஒன்றியச் செயலாளர் அன்னபிரகாஷ் உள்ளிட்ட 14 பேர் மீது வழக்கு பதியப்பட்டது. இந்த வழக்கில் தாசில்தார் உட்பட 11 பேர் இதுவரை கைது செய்யப்பட்டு, ஜாமினில் விடுவிக்கப்பட்டு உள்ளனர்.இந்நிலையில் வடவீநாயக்கன்பட்டி நிலத்தை அபகரிப்பு செய்த வழக்கில், தொடர்புடைய பின்னத்தேவன்பட்டி மேற்குத் தெரு ஈஸ்வரன், தனக்கு முன்ஜாமின் வழங்கக்கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளை, உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இரு மனுக்களும் தள்ளுபடியாகின. இதனால் சி.பி.சி.ஐ.டி., டி.எஸ்.பி., சரவணன் வழிகாட்டுதலில் இன்ஸ்பெக்டர் சித்ராதேவி தலைமையிலான போலீசார் ஈஸ்வரனை நேற்று கைது செய்தனர்.போலீசார் கூறுகையில், 'கைதான ஈஸ்வரன், விவசாயம் செய்கிறார். செங்கல் சூளை உரிமையாளராக உள்ளார். வடவீர நாயக்கன்பட்டியில் உள்ள அரசு நிலத்தை செல்வேந்திரன் என்பவருக்கு பத்திரப்பதிவு செய்து கொடுத்து மோசடியில் ஈடுபட்டுள்ளார். முன்ஜாமின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதால் கைது செய்தோம், என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை