உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ஆறு மாதங்களாக தேங்காய் கிலோ ரூ.50க்கு மேல் விற்பனை உற்பத்தி குறைவால் விலை உயர்ந்தும் பலன் இல்லை

ஆறு மாதங்களாக தேங்காய் கிலோ ரூ.50க்கு மேல் விற்பனை உற்பத்தி குறைவால் விலை உயர்ந்தும் பலன் இல்லை

தேனி : மாவட்டத்தில் கடந்த 6 மாதங்களாக தேங்காய் கிலோ ரூ.50க்கு மேல் விற்பனையாகிறது. உற்பத்தி குறைவால் தென்னை விவசாயிகளுக்கு விலை உயர்வால் பலன் இல்லை என்கின்றனர்.மாவட்டத்தில் தென்னை மரங்கள் கடந்தாண்டு கேரள வேர்வாடல் நோய் தாக்குதலால் பாதிக்கப்பட்டன. அதைத்தொடர்ந்து வெப்ப அலை தாக்குதலால் பூக்கள் உதிர்ந்து உற்பத்தி குறைய துவங்கியது. இதனால் கிலோ ரூ.25க்கு விற்ற தேங்காய் படிப்படியாக ரூ.58 வரை கடந்த அக்டோபரில் உயர்ந்தது. மேலும் பொள்ளாச்சி, கோவை உட்பட அனைத்து மாவட்டங்களிலும் இந்த பாதிப்பு ஏற்பட்டதால் 6 மாதங்களுக்கு மேலாக தேங்காய் விலை தொடர்ந்து கிலோ ரூ.50க்கு மேல் விற்பனையாகிறது. இந்த விலை உயர்வால் ஓட்டல்கள், இல்லத்தரசிகள் பாதித்துள்ளனர். தேங்காய் விலை உயர்வால் தக்காளி, புதினா, மல்லி விலை குறைந்து விற்பதால் பல வீடுகளில் தேங்காய் சட்னிக்கு மாற்றாக தக்காளி, மல்லி, புதினா சட்னி தயாராகின்றன.விவசாயிகள் கூறுகையில், 'விலை அதிகரித்தாலும் உற்பத்தி குறைந்துள்ளது. இந்த விலை ஏற்றத்தால் விவசாயிகளுக்கு பயன் இல்லை. தோப்பு பராமரிப்பு செலவு அதிகரித்து வருகிறது. மகசூல் அதிகம் தரும் தென்னை ரகங்களை வேளாண் துறையினர் கண்டறிந்து விசாயிகளுக்கு வழங்க வேண்டும,' என்றனர்.வேளாண் விற்பனை குழு அதிகாரி கூறுகையில், 'சில ஆண்டுகளுக்கு முன்பு வரை மலேசியாவில் இருந்து தேங்காய் இறக்குமதி இருந்தது. அங்கும் உற்பத்தி குறைந்ததால், இறக்குமதி நின்றுவிட்டது. மாவட்டத்தில் தென்னை சாகுபடி நிலங்கள் பல தற்போது வீட்டடி மனைகளாக மாறி வருகிறது. இதனால் இந்த விலை உயர்வு தொடர்ந்து நீடிக்கிறது. என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி