சரண கோஷமிட்டு சுருளி அருவியில் சபரிமலைக்கு மாலை அணிந்த பக்தர்கள்
கம்பம் : சபரிமலை ஐயப்பன் கோயில் மகர விளக்கு மண்டல பூஜையில் பங்கேற்க பக்தர்கள் மாலை அணிந்து விரதம் துவங்கியுள்ளனர்.சபரிமலை ஐயப்பன் கோயிலில் மகரவிளக்கு மண்டல பூஜை நிகழ்ச்சிகள் பிரதானமாகும். பக்தர்கள் கார்த்திகை முதல் நாள் துளசி மாலை அணிந்து 48 நாட்கள் விரதமிருந்து ஐயப்பனை தரிசிக்க செல்வது வழக்கம். ஆனால் தற்போது கூட்டத்தை கருத்தில் கொண்டு பெரும்பாலான பக்தர்கள் முன்கூட்டியே மாலை அணிந்து விரதத்தை துவக்கி கோயிலிற்கு செல்ல துவங்கி உள்ளனர்.கம்பம் சுருளி வேலப்பர் சுப்ரமணியசாமி ஐயப்பா சேவா சங்கத்தினர் 47 வது ஆண்டு சபரி யாத்திரைக்கான நிகழ்ச்சியை ஆரம்பித்துள்ளனர். அதிகாலையில் சுருளி அருவியில் உள்ள கைலாசநாதர் குகை பகுதியில் ஏராளமான பக்தர்கள் நீராடி, குருநாதர் நாராயணன் பக்தர்களுக்கு துளசி மாலை அணிவித்து விரதத்தை துவக்கி வைத்தார். முன்னதாக அங்குள்ள பாதவிநாயகர் கோயிலில் பூஜை செய்தும், அங்குள்ள ஐயப்பன் கோயிலில் படி பூஜை செய்தும் வழிபட்டனர்.இந்த சேவா சங்க குருநாதர் நாராயணன் கூறுகையில், வழக்கமாக கார்த்திகை முதல் தேதி மாலை அணிந்து விரதத்தை துவக்குவோம். இந்தாண்டு முன்கூட்டியே செல்ல வேண்டும் என்பதற்காக நேற்று காலை சுருளி அருவியில் குளித்து மாலை அணிந்து விரதத்தை துவக்கி உள்ளோம், என்றார்.