| ADDED : ஜன 22, 2024 05:46 AM
கம்பம்: சண்முகா நதி அணை திறக்கப்பட்டு 40 நாட்களை கடந்தும் தனது முழு கொள்ளளவில் இருப்பதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அணையில் இருந்து 14.47 கன அடி திறந்து விடப்பட்டு வருகிறது.ராயப்பன்பட்டி மலை அடிவாரத்தில் சண்முகா நதி அணை கட்டப்பட்டுள்ளது. 52.5 அடி உயரம் உள்ள இந்த அணையில் இருந்து பாசனத்திற்கு என 26 அடி வரை தண்ணீர் எடுக்கலாம். தென் மேற்கு பருவமழை காலத்தை விட வடகிழக்கு பருவமழை காலங்களில் மட்டுமே இந்த அணை நிரம்பும்.இந்த அணை ராயப்பன்பட்டி, ஆனைமலையன்பட்டி, சின்ன ஒவுலாபுரம், அழகாபுரி, கன்னிசேர்வைபட்டி, எரசை, , வெள்ளையம்மாள்புரம், ஓடைப்பட்டி ஆகிய கிராமங்களில் உள்ள 1640 ஏக்கருக்கு மறைமுக பாசனத்திற்கு பயன்படுகிறது. அதாவது இந்த கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயர பயன்படுகிறது. நேரடி பாசன வசதி கிடையாது.கடந்தாண்டு நவ.18 ல் திறந்து தொடர்ந்து 72 நாட்கள் வழங்கப்பட்டது. இந்தாண்டு டிச.8 ல் தண்ணீர் திறக்கப்பட்டது.விநாடிக்கு 14.47 கனஅடி வீதம் திறக்கப்படுகிறது. அணையின் கொள்ளளவு 49 அடி வரை வந்தது. ஆனால் மேகமலையில் மழை பெய்ததன் காரணமாக, அணை மீண்டும் தனது முழு கொள்ளளவான 52.5 அடியை எட்டியுள்ளது. அணையிலிருந்து 14.47 கனஅடி எடுப்பதை தவிர்த்து உபரி நீர் மறுகால் பாய்ந்து வருகிறது.நேற்று முன்தினம் காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 52.10 அடியாக உள்ளது. அணைக்கு 10 கன அடி வரத்து உள்ளது. அணையிலிருந்து 14.47 கன அடி தண்ணீர் விடுவிக்கப்படுகிறது. அணையிலிருந்து தண்ணீர் திறந்து 40 நாட்களை கடந்தம், அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவில் இருப்பதால், விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.