| ADDED : ஜன 19, 2024 05:45 AM
சின்னமனூர்: மேகமலை பகுதியில் உள்ள மலைக்கிராமங்களில் அதிகபட்ச உறைபனி நிலவுவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.தேனி மாவட்ட சுற்றுலா தலங்களில் மேகமலை பகுதிகள் முக்கிய இடம் பெறுகிறது. இங்குள்ள ஹைவேவிஸ், மணலாறு, வெண்ணியாறு, இரவங்கலாறு, மகாராஜா மெட்டு, தூவானம் உள்ளிட்ட பகுதிகள் இயற்கை எழில் கொஞ்சும் பகுதிகளாகும். மூணாறு சீதோஷ்ண நிலையை போன்று இருக்கும் பொதுவாக நவம்பர் முதல் ஜனவரி வரை குளிர், அதிகபட்ச பனிப்பொழிவு இருக்கும்.இந்தாண்டு வடகிழக்கு பருவமழை சில நாட்களுக்கு முன்பு தான் முடிவிற்கு வந்துள்ளது. இந்நிலையில் சில நாட்களாக சின்னமனூரிலிருந்து ஹைவேவிஸ் வரை மலை ரோட்டில் பனிமூட்டம் நிரம்பி உள்ளது. இரவு 9:00 மணிக்கு ஆரம்பமாகி மறுநாள் காலை 10:00 மணி வரை பனிமூட்டம் உள்ளது. இதனால் வாகனங்களை இயக்குவதில் சிரமம் உள்ளது. பொதுவாக மாலை 5:00 மணிக்கு பின் வாகனங்கள் அனுமதிக்கப்படுவதில்லை. அதனால் பிரச்னை இல்லை. ஆனால் காலையில் 7:00 மணிக்கு பின் போக்குவரத்து துவங்கி விடும். அப்போது வாகனங்களை இயக்க முடியாத நிலை உள்ளது.தொடர்ந்து மணலாறு இரவங்கலாறு பகுதியில் கடும் பனிப்பொழிவு நிலவுகிறது. இதனால் இப்பகுதியில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பகல் முழுவதுமே பனிப்பொழிவு காணப்படுகிறது. எந்தாண்டும் இல்லாத அளவிற்கு பனிப்பொழிவு இருப்பதால், மேகமலை பகுதியில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு, சுற்றுலா பயணிகளின் வருகையும் கணிசமாக குறைந்துள்ளது.