ஆசிரியை கொலை வழக்கில் கீழ்நீதிமன்றம் விடுதலை செய்தவருக்கு ஆயுள்தண்டனை: உயர்நீதிமன்றம் உத்தரவு
மதுரை: தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே ஆசிரியையை கொலை செய்த வழக்கில் ஒருவரை கீழ்நீதிமன்றம் விடுதலை செய்ததை ரத்து செய்து, ஆயுள் தண்டனை விதித்தது உயர்நீதிமன்ற மதுரைக் கிளை. ஆண்டிபட்டி அருகே கொண்டமநாயக்கன்பட்டி சரண்யா, ஈரோடு பெருந்துறையில் ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்தார். இவர் பழனிசெட்டிபட்டி சிவா 36,விற்கு சகோதரி உறவுமுறை. இவர் சரண்யாவுடன் தவறான எண்ணத்தில் பழகி வந்தார். அவரை விரும்புவதாகக் கூறியதை சரண்யா ஏற்கவில்லை. சரண்யாவிற்கு வேறொருவருடன் திருமணம் செய்ய நிச்சயதார்த்தம் நடந்தது. ஆத்திரமடைந்த சிவா 2015 ஜன.22 ல் சரண்யாவின் வீட்டிற்கு சென்றார். அவரை கத்தியால் குத்தி கொலை செய்ததாக ஆண்டிபட்டி போலீசார் வழக்கு பதிந்தனர். தேனி நீதிமன்றத்தில் விசாரணையில், குற்றச்சாட்டை அரசு தரப்பு நிரூபிக்கத் தவறியதாக, நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டது. இதை எதிர்த்து ஆண்டிபட்டி போலீஸ் தரப்பு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. நவ.,4 ல் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: குற்றச்சாட்டை அரசு தரப்பு நிரூபித்துள்ளது. கீழமை நீதிமன்ற உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. தண்டனை குறித்து சிவாவிடம் கேள்வி எழுப்புவதற்காக அவர் நவ.11 ல் இந்நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்றனர். நீதிபதிகள் பி.வேல்முருகன், எல்.விக்டோரியா கவுரி அமர்வு நேற்று விசாரித்தது. சிவா, அரசு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் செந்தில்குமார் ஆஜராகினர். சிவா: விருப்பமின்றி வேறொருவருக்கு கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைக்க உள்ளதாக சரண்யா தெரிவித்தார். அவரது அழைப்பின் பேரில் அங்கு சென்றேன். நீதிபதிகள்: அப்படி யெனில் போலீசில் புகார் செய்திருக்க வேண்டும். சந்தர்ப்பசூழல் உங்களுக்கு எதிராக உள்ளது. இவ்வாறு விவாதம் நடந்தது. நீதிபதிகள்,' சிவாவிற்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படுகிறது,' என உத்தரவிட்டனர்.