முல்லைப்பெரியாறு அணையில் பராமரிப்புப் பணிகள் துவக்கம் - பேபி அணையை பலப்படுத்துவது எப்போது
கூடலுார்:முல்லைப் பெரியாறு அணைக்கு தளவாடப்பொருட்கள் கொண்டு செல்லப்பட்டதைத் தொடர்ந்து பராமரிப்பு பணிகள் துவங்கியுள்ளன. அணையை ஒட்டியுள்ள பேபி அணையை பலப்படுத்தும் பணிக்கு அனுமதி எப்போது என விவசாயிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களில் நீராதாரமாக விளங்கும் முல்லைப் பெரியாறு அணை தமிழக நீர்வளத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இதனால் அணை பராமரிப்பு பணிகள் முழுவதும் தமிழக நீர்வளத்துறை செய்து வருகிறது.அணையில் வழக்கமாக நடைபெறும் பராமரிப்பு பணிகளுக்கு தளவாடப் பொருள்களை கொண்டு செல்ல எவ்வித தடையும் செய்யக்கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பதிருந்த போதிலும் கேரள அரசின் தடையால் கடந்த 7 மாதங்களாக அணையில் பராமரிப்பு பணிகள் எதுவும் செய்ய முடியவில்லை.2024 டிச. 4ல் பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதற்காக தமிழக நீர்வளத்துறை சார்பில் இரண்டு லாரிகளில் தளவாடப் பொருட்களை கொண்டு சென்றனர். வண்டிப்பெரியாறு அருகே வள்ளக்கடவு சோதனைச் சாவடியில் கேரள வனத்துறையினர் அனுமதி மறுத்து தடுத்து நிறுத்தினர். இதைக் கண்டித்து தமிழகப் பகுதியில் விவசாயிகள் சார்பில் தொடர்ந்து ஆர்ப்பாட்டம் நடந்தது. உயரதிகாரிகளின் பேச்சு வார்த்தைக்கு பின் 15 நாட்களுக்குப் பின் தளவாடப் பொருட்கள் கொண்டு செல்ல அனுமதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தளவாடப் பொருட்கள் அனைத்தும் லாரிகளில் கொண்டு சேர்த்தபின் தற்போது பராமரிப்பு பணிகள் துவங்கின. அணையை ஒட்டியுள்ள குடியிருப்பு பகுதிகள், ஆய்வாளர் குடியிருப்புகளில் மட்டும் பராமரிப்பு பணிகள் செய்த போதிலும் மெயின் அணை, பேபி அணை உள்ளிட்ட பகுதிகளில் எவ்வித பணியும் செய்ய அனுமதிக்கவில்லை. குறிப்பாக பேபி அணை பலப்படுத்தும் பணிக்கும் இதுவரை அனுமதி இல்லை. இது விவசாயிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.விவசாயிகள் கூறும் போது:தற்போது அணையை ஒட்டி அமைந்துள்ளஆய்வாளர் மாளிகை மற்றும் குடியிருப்புகளில் கழிவு நீர் தொட்டியை பராமரிக்க மட்டுமே அனுமதி வழங்கி பணிகள் நடந்து வருகிறது. ஆனால் பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ள பேபி அணைப்பகுதியில் செய்ய வேண்டிய 14 வேலைக்கான அனுமதியை தருவதில் கேரளா தொடர்ந்து முரண்டு பிடித்து வருகிறது. பேபி அணையை விரைவில் பலப்படுத்தியபின் அணை நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.