கொச்சி-தனுஷ்கோடி சாலையில் ஊர்வலம்: 15 பேர் மீது வழக்கு
மூணாறு: கொச்சி, தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் ஊர்வலம் நடத்திய சம்பவத்தில் ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்கள் இருவர் உட்பட 15 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். கொச்சி, தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் மூணாறு, கொச்சி இடையே 126 கி.மீ., தூரம் ரூ.1250 கோடி செலவில் ரோடு அகலப்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன. இந்த ரோட்டில் அடிமாலி அருகே வாளரா முதல் நேரியமங்கலம் வரை ரோடு பணிகள் விதிமுறைகள் மீறி நடப்பதாக கூறி பணிகள் செய்ய தடை விதித்து கேரள உயர்நீதி மன்றம் உத்தரவிட்டது. அதனை கண்டித்து தேசிய நெடுஞ்சாலை பாதுகாப்பு குழு எனும் அமைப்பு சார்பில் தேவிகுளம் தாலுகாவில் ஜூலை 31ல் பந்த் நடந்தது. அப்போது கொச்சி, தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் ஆறாம் மைல் வனத்துறை அலுவலகம் முதல் நேரியமங்கலம் வனத்துறை அலுவலகம் வரை ஊர்வலம், நேரியமங்கலம் வனத்துறை அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டமும் நடந்தது. அதற்கு அனுமதி பெறாமல் போராட்டம் நடத்தி போக்குவரத்து இடையூறு செய்ததாக அடிமாலி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அச்சம்பவத்தில் அடிமாலி ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்கள் கிருஷ்ணமூர்த்தி, அன்சாரி உட்பட 15 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.