மேலும் செய்திகள்
மதுரையை மிரட்டும் மேகங்கள்
09-Oct-2024
கம்பம், : கம்பம் பள்ளத்தாக்கு விவசாயிகள் நலன் கருதி முல்லைப் பெரியாறு அணையிலிருந்து 900 கனஅடி எடுக்கும் நீரின் அளவை குறைக்க வேண்டும் என விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.கம்பம் பள்ளத்தாக்கில் 14,707 ஏக்கர் இருபோக நெல் சாகுபடி நடைபெறுகிறது. பி.டி.ஆர்., வாய்க்கால் மூலம் 5100 ஏக்கர் ஒரு போக பாசனம் நடைபெறுகிறது. இதை தவிர்த்து மேலூர், சிவகங்கை, ராமநாதபுரம் , திண்டுக்கல் என பல மாவட்டங்களில் 2 லட்சம் ஏக்கர் வரை முல்லைப் பெரியாறு பாசனம் நடைபெறுகிறது. கம்பம் பள்ளத்தாக்கு இரு போக சாகுபடிக்கு முன்னுரிமை தர ஆயக்கட்டு விதிமுறைகள் உள்ளன. ஆனால் விதிமுறைகளை நீர்வளத்துறையினர் கண்டுகொள்வதில்லை என விவசாயிகள் குற்றம் சாட்டுகிகிறனர்.கம்பம் பள்ளத்தாக்கில் தற்போது முதல் போக நெல் அறுவடை துவங்கியுள்ளது. சில வாரங்களில் இரண்டாம் போகத்திற்கான பணிகளை துவங்கி விடுவார்கள். இப்போதே வயல்களில் நாற்றுகள் வளர்க்க துவங்கி உள்ளனர்.இந்நிலையில் அணையின் நீர் மட்டம் 119.85 அடியாக உள்ளது. அணைக்கு விநாடிக்கு 349 கன அடி நீர் மட்டுமே வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து விநாடிக்கு 900 கன அடி நீர்விடுவிக்கப்படுகிறது. வைகை அணை மொத்த கொள்ளளவு 71 அடியாகும். தற்போது 56.82 அடி உள்ளது. அணைக்கு விநாடிக்கு 959 கன அடியும், அணையிலிருந்து விநாடிக்கு 869 கனஅடியும் விடுவிக்கின்றனர். வடகிழக்கு பருவ மழையில் பெரியாறு அணைக்கு பெரிய அளவில் நீர் வரத்து இருக்காது. தென்மேற்கு பருவ மழை காலத்தில் தான் தண்ணீர் வரத்து இருக்கும். இந்த நிலையில் பெரியாறு அணையில் இருந்து 900 கன அடி தண்ணீர் எடுப்பதற்கு கம்பம் பள்ளத்தாக்கு விவசாயிகள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.இது குறித்து சங்க நிர்வாகிகள் கூறுகையில், அணையின் நீர் மட்டம் 120 அடிக்கும் கீழ் வந்து விட்டது. இப்போது இவ்வளவு தண்ணீர் அணையில் இருந்து எடுத்தால், அணை நீர் மட்டம் மள மள என குறைந்து விடும். கம்பம் பள்ளத்தாக்கில் இரண்டாம் போக நெல் சாகுபடி செய்ய முடியாத நிலை ஏற்படும். நீர்ளவத்துறை பொறியாளர்கள் உரிய திட்டமிடல் இன்றி பொறுப்பின்றி உள்ளனர் . எனவே கம்பம் பள்ளத்தாக்கின் இரண்டாம் போக நெல் சாகுபடியை கருத்தில் கொண்டு, அணையில் இருந்து 900 கன அடி எடுப்பதை குறைக்க தமிழக அரசு உத்தரவிட வேண்டும், என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
09-Oct-2024