முதியோர் உதவித்தொகை வழங்க கோரி தீர்மானம்
தேனி: தேனி மாவட்ட ஊராட்சிக்கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை பெற உத்தரவு பெற்றும் கிடைக்காதவர்களுக்கு ஆணை பிறப்பித்த நாள் முதல் உதவித்தொகை வழங்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.மாவட்ட ஊராட்சி அலுவலகத்தில் மாவட்ட ஊராட்சி தலைவர் பீரித்தா தலைமையில் கூட்டம் நடந்தது. துணைத்தலைவர் ராஜபாண்டியன், செயலாளர் குமரேசன் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் 26 தீர்மானங்கள் நிறைவேற்ப்பட்டன. மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மாற்றுத்திறனாளிகள், முதியோர் உதவித்தொகை பெற பலருக்கும் ஆணை வழங்கப்பட்டுள்ளது. ஆனால், இன்னும் உதவித்தொகை வழங்கப்படவில்லை. முதியோர்கள் பலர் இறந்தும் விட்டனர். உதவித்தொகை பெறுவதற்கு எப்போது ஆணை வழங்கினார்களோ, அத்தேதியில் இருந்து உதவித் தொகை வழங்க வேண்டும் என சிறப்பு தீர்மானத்தை துணைத்தலைவர் கொண்டு வந்தார். கவுன்சிலர்கள் ஆதரவுடன் அந்த சிறப்பு தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. கூட்டத்தில் பெரியகுளம் தாசில்தார் அலுவலக அதிகாரிகள், கனிமவளத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.