குளிக்க, கழிப்பறைக்கு உறவினர்கள் வீடுகளுக்கு செல்லும் மாணவர்கள் சமூக நீதி விடுதியில் தண்ணீர் வசதி இன்றி அவதி
தேனி :கண்டமனுாரில் உள்ள சமூக நீதி விடுதியில் தண்ணீர் இல்லாததால் தங்கியுள்ள மாணவர்கள் குளிக்கவும், கழிப்பறை செல்லவும் உறவினர்கள் வீடுகளுக்கு செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. கண்டமனுார் சத்யா காலனியில் சமூக நீதிவிடுதி செயல்படுகிறது. இங்கு 50 மாணவர்கள் தங்கி படிக்க விடுதி வசதி 2002ல் கட்டப்பட்டது. தற்போது விடுதியில் 23 மாணவர்கள் தங்கி, கண்டமனுார் அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்து வருகின்றனர். விடுதி முன்புற வளாகத்தில் 400 அடி ஆழுமுள்ள போர்வெல் பயன்பாட்டில் விடுதி இயங்கி வந்தது. தற்போது போர்வேல் துார்ந்து போய், செயலிழந்தது. இதனால் கண்டமனுார் ஊராட்சி குடிநீர் இணைப்பு மூலம் கிடைக்கும் நீரை பயன்படுத்தி மாணவர்களுக்கான உணவு மட்டுமே சமைக்க முடிகிறது. தண்ணீர் தட்டுப்பாட்டால் மாணவர்கள் தினமும் குளிக்கவும், கழிப்பறைகள் செல்லவும், துணி துவைக்க தண்ணீர் வசதி இல்லை. இதனால் ஒரு சில மாணவர்கள் தவிர 19 மாணவர்கள் அருகில் உள்ள கிராமங்களில் வசிக்கும் தங்களது உறவினர்கள் வீடுகளுக்கு சென்று, பின் விடுதிக்கு வந்து பள்ளி செல்லும் அவல நிலை தொடர்கிறது. இந்நிலையில் கண்டமனுார் சுற்றுப்பகுதி கிராமங்களில் வசிக்கும் மாணவர்கள்,வெளியூர் மாணவர்கள் என 25 பேர் புதிதாக விடுதியில் சேர விண்ணப்பித்து, காத்திருக்கின்றனர். இந்நிலையில் விடுதியில் தண்ணீர் பற்றாக்குறை பெரும் சவாலக உள்ளது. குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என புதிய தமிழகம் கட்சியின் ஆண்டிபட்டி தொகுதி செயலாளர் அய்யனார், கலெக்டரிடம் மனு அளித்து வலியுறுத்தி உள்ளார்.