தேவாரத்தில் 1700 பேருக்கு பட்டா வழங்க சர்வே துவக்கம்
தேனி: தேவாரத்தில் பஸ் ஸ்டாண்ட் அதன் சுற்றுபகுதிகளில் பல ஆண்டுகளாக வசிக்கும் சுமார் 1700க்கு மேற்பட்டவர்களுக்கு பட்டா வழங்குவதற்கான பணிகளை நில அளவை, வருவாய்த்துறையினர் துவங்கி உள்ளனர். தேவாரத்தில் பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள பகுதிகளில் வீடுகள் கட்டி வசித்து வருவோருக்கு பல தலைமுறைகளுக்கு முன் வழங்கிய அனுபவபட்டா மட்டும் உள்ளது. அதனை வைத்து வங்கி கடன், பத்திர பதிவு உள்ளிட்டவை மேற்கொள்ள முடியாமல் அவதியடைந்துவந்தனர். இந்நிலையில் அந்த பகுதிகளில் வசிப்பவர்களுக்கு பட்டா வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை துவங்கப்பட்டுள்ளன. அதன்படி பல ஆண்டுகளாக வசித்து வருவதற்கான ஆவணங்கள் சமர்பிக்க நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். இது தவிர அவர்களிடம் உள்ள ஆவணங்கள் அடிப்படையில் நில அளவைப்பணியும் துவங்கப்பட்டுள்ளது. பெரியகுளம் தாலுகாவில் டி.கள்ளிப்பட்டி பகுதியில் வசிப்பவர்களுக்கு பட்டா வழங்கியது போன்று தேவாரம் பகுதியிலும் வீடுகளுக்கு பட்டா வழங்க பணிகள் துவங்கி உள்ளதாகவும், இதன் மூலம் அப்பகுதிகளில் வசிக்கும் சுமார் 1700க்கும் மேற்பட்டவர்கள் பயனடைவார்கள் என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.