உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /  பழமையான வரலாறுகளை நினைவூட்டும் அரசு அருங்காட்சியகம் மாவட்டத்தின் சமூக வரலாறுகளை கண்டு ரசிக்கலாம் வாங்க

 பழமையான வரலாறுகளை நினைவூட்டும் அரசு அருங்காட்சியகம் மாவட்டத்தின் சமூக வரலாறுகளை கண்டு ரசிக்கலாம் வாங்க

ஆண்டிபட்டி: தேனி மாவட்டத்தின் பழமையான வரலாறுகளை நினைவுபடுத்தும் வகையில் ஆண்டிபட்டி அரசு அருங்காட்சியகத்தில் பழமையான பொருட்கள், படங்களுடன் நிகழ்வுகளை காட்சிப்படுத்தி உள்ளனர். பள்ளி, கல்லூரி மாணவர்கள், தொல்லியல், வரலாற்று துறை ஆராய்ச்சியாளர்களுக்கு பல கூடுதல் தகவல்களை சேகரிக்க உதவுகின்றன. சுற்றுலா பண்பாடு மற்றும் அருங்காட்சியங்கள் துறை சார்பில் தேனி மாவட்ட அருங்காட்சி யகம் ரூ.1.30 கோடி மதிப்பில் ஆண்டிபட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் 2021ல் கட்டப்பட்டது. இரு தளங்களைக் கொண்ட கட்டிடத்தில் கீழ்த்தளத்தில் தேனி மாவட்டத்தின் அரசியல், சமூக, இயற்கை வரலாறுகளை விளக்கும் விதமாகவும், மேல் தளத்தில் இலக்கியம், பண்பாடு, பொருளாதாரம் வரலாறு, தொழில் வரலாறு குறித்து பழமையான பொருட்கள், உரிய படங்கள் உள்ளன. காட்சிப்படுத்தியுள்ளவைகள் விபரம்: தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள மண் வளம், விவசாயம் அவற்றை தொழிலுக்கு பயன்படுத்திய விதம் மண் வகைகள், மண்ணுக்கேற்ற விவசாயம் எந்தெந்த ஊரில் என்னென்ன பொருட்கள் விளைகிறது. விளை பொருட்களுக்கான சந்தைப்படுத்தும் விதங்கள் குறித்த விபரங்கள் காட்சிப்படுத்தப் பட்டுள்ளன. இயற்கை வரலாற்றில் தோட்டக்கலை துறை சார்பில் விதைகள், தானியங்கள், ஒட்டு ரகவிதைகள், பழங்கள், காய்கறிகள், உலர் தாவர வகைகள் படங்களாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. மேகமலை பகுதியில் உள்ள விலங்குகளின் படங்கள், கடமான் கொம்பு, விளாமீன் பற்கள் உட்பட சில விலங்குகளின் உடல் பாகங்கள் வன விலங்குகள் குறித்த விபரங்களை அறிந்து கொள்ள உதவுகின்றன. பழங்கால படிமங்கள் இயற்கை வரலாறு குறித்த காட்சிகளில் கனிம வளங்களில் கற்களின் வகைகள், சுழற்சி பாறை, அவை உருவாகும் விதம், பாறை சுழற்சி குறித்த விபரங்களுடன், உயிரினங்களின் பரிணாம வளர்ச்சி குறித்து படங்களுடன் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. சுனாமி குறித்த புகைப்படங்கள், பழங்காலத்தில் கண்டெடுக்கப்பட்ட உயிரினங்களின் எலும்புகள் புதைந்து போன படிமங்கள், பூகம்பம், நில அதிர்வு குறித்த விளக்க படங்கள் இடம் பெற்றுள்ளன. அரசியல் வரலாற்றில் தேனி மாவட்டத்தின் பரப்பு மக்கள் தொகை பல நூற்றாண்டுகளுக்கு முன்பு பயன்படுத்திய பொருட்கள், கருவிகள், ஆயுதமாக பயன்படுத்திய கற்களின் வகைகள், இரும்பால் செய்த பல வகை ஆயுதங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. பழங்கால அரண்மனை படங்கள் 10000 -- 5000 ஆண்டுகளுக்கு முற்பட்ட புதிய கற்காலம், 1500 - - 200 ஆண்டுகளுக்கு முற்பட்ட பெருங் கற்காலங்களில் மனிதர்கள் வாழ்ந்த விதம் அவர்கள் எப்படி இருந்தனர் என்பதை படங்கள் மூலம் விளக்கப்பட்டுள்ளன. பழங்கால விளையாட்டு முறைகள், மூலிகை செடிகளால் உருவான ஓவியம், ரோமானிய நாணயங்கள், தேனி மாவட்டத்தின் பழங்கால அரண்மனைகள் குறித்த படங்கள் இடம்பெற்றுள்ளன. தேனி மாவட்டத்தின் சுற்றுலா இடங்களான மஞ்சளாறு, சண்முகா நதி, சோத்துப்பாறை, டாப் ஸ்டேஷன், குரங்கணி, ஹைவேவிஸ், பழனிசெட்டிபட்டி அணை, சுருளி அருவி, புலி அருவி, கும்பக்கரை அருவி ஆகிய படங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. கிடைத்த கல்வெட்டுகள் சமூக வரலாற்றில் வீரபாண்டி கண்ணீஸ்வரமுடையார், கவுமாரியம்மன் கோயில், பெரியகுளம் பாலசுப்ரமணியர் கோயில், போடி தீர்த்த தொட்டி வேலப்பர் கோவில், தேவதானப்பட்டி மூங்கிலணை காமாட்சி காமாட்சி அம்மன் கோயில் குறித்த விபரங்களுடன் படங்கள் இடம்பெற்றுள்ளன. நாட்டுப்புற கலைகள், பழங்கால கலைஞர் களின் உடைகள், இசைக்கருவிகள், பல வகை மண் பாண்டங்கள், சிற்பங்கள், முதுமக்கள் தாழி, தேனி மாவட்டத்தில் கிடைத்த கல்வெட்டுகள் பழங்கால வரலாறுகளை நினைவுபடுத்தும் விதமாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அருங்காட்சியக அலுவலர்கள் தெரிவித்ததாவது: அருங்காட்சியகத்தில் நுழைவு கட்டணமாக பெரியவர்களுக்கு ரூ.10, சிறியவர்களுக்கு ரூ.5, வெளிநாட்டவருக்கு ரூ.100, போட்டோ எடுக்க ரூ.100, வீடியோ எடுக்க ரூ.200 வீதம் நிர்ணயம் செய்யப் பட்டுள்ளது. அருங்காட்சியகத்தில் வெள்ளிக்கிழமை வார விடுமுறை. அருங்காட்சியகத்திற்கு வரும் மாணவர்கள் பொது மக்களுக்கு அதன் சிறப்புகள் குறித்து காப்பாளர் மற்றும் அலுவலர்கள் உடனிருந்து விளக்கி வருகின்றனர் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி