குடியிருப்பு அருகே நடமாடிய புலி தொழிலாளர்கள் அச்சம்
மூணாறு: மூணாறு அருகே கே.டி.எச்.பி. கம்பெனிக்கு சொந்தமான மாட்டுபட்டி எஸ்டேட் டாப் டிவிஷனில் குடியிருப்பு அருகே புலி நடமாடியதால் தொழிலாளர்கள் அச்சம் அடைந்தனர்.அப்பகுதியில் புலி, சிறுத்தை நடமாட்டம் அதிகரித்த நிலையில், அவற்றிடம் சிக்கி கடந்த இரண்டு ஆண்டுகளில் 15க்கும் மேற்பட்ட பசுக்கள் பலியாகின.இந்நிலையில் அப்பகுதியில் தொழிலாளர்கள் வசிக்கும் குடியிருப்பு அருகே நேற்று முன்தினம் இரவு புலி நடமாடியது. அதன் கால் தடங்களை நேற்று காலை பார்த்த தொழிலாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். வனத்துறை ஆய்வில், அவை புலியின் கால் தடங்கள் என தெரிய வந்ததால் தொழிலாளர்கள் அச்சம் அடைந்தனர்.புலி, சிறுத்தை ஆகியவற்றின் நடமாட்டத்தை வனத்துறையினர் கட்டுப்படுத்தவில்லை என்றால் கடும் போராட்டம் நடத்தப் போவதாக தொழிலாளர்கள் தெரிவித்தனர்.