| ADDED : டிச 31, 2025 04:57 AM
ஆண்டிபட்டி: தேனி மாவட்டம் ஆண்டிபட்டி வைகை அணையில் இருந்து மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களின் பாசனத்திற்கு கால்வாய் வழியாக வெளியேற்றப்படும் நீரின் அளவு தொடர்ந்து அதிகரிப் பதால் அணை நீர்மட்டம் குறைகிறது. வைகை அணைக்கு முல்லைப் பெரியாறு, போடி கொட்டக்குடி ஆறு, வருஷநாடு வைகை ஆறுகள் மூலம் நீர் வரத்து கிடைக்கும். சில வாரங்களாக மழை இல்லாததால் ஆறுகளில் நீர் வரத்து இல்லை. முல்லைப் பெரியாறு அணையில் திறக்கப்படும் நீரில் குறிப்பிட்ட அளவு மட்டும் வைகை அணையை சென்றடைகிறது. வைகை அணையில் இருப்பில் இருந்த நீர் சில மாதங்களாக மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்களின் பாசனம் மற்றும் குடிநீருக்கு தொடர்ந்து பயன் படுத்தப்படுகிறது. அக்., 27ல் அணை நீர்மட்டம் 70.24 அடியாக இருந்த நிலையில் படிப்படியாக குறைந்தது. டிச., 25ல் பாசனத்திற்கு நிறுத்தப்பட்ட நீர் இரு நாட்களுக்குப் பின் மீண்டும் வினாடிக்கு 1050 கன அடி வீதம் திறந்து விடப்பட்டது. வெளியேற்றப்படும் நீரின் அளவு படிப்படியாக உயர்த்தப்பட்டு, நேற்று வினாடிக்கு 1900 கன அடி வீதம் வெளியேறியது. குடிநீருக்காக வினாடிக்கு 69 கன அடி நீர் வழக்கம் போல் வெளியேற்றப்படுகிறது. டிச., 11 ல் 64.37 அடியாக இருந்த நீர்மட்டம் படிப்படியாக குறைந்து நேற்று 54.17 அடியானது. அணையின் மொத்த உயரம் 71 அடி. கடந்த 20 நாட்களில் அணையின் நீர்மட்டம் 10 அடி குறைந்துவிட்டது.