ஜம்புலிப்புத்தூர் கண்மாய்க்கரை ரோட்டில் வாகனங்கள் செல்ல சிரமம்
ஆண்டிபட்டி; ஆண்டிபட்டி ஒன்றியம், சண்முகசுந்தரபுரத்தில் இருந்து ரங்கசமுத்திரம், ஜம்புலிபுத்தூர் கிராமங்களுக்கு கண்மாய்க்கரை வழியாகச் செல்லும் ரோடு சேதம் அடைந்து குண்டும், குழியுமாக இருப்பதால் வாகனங்கள் சென்று வருவதில் சிரமம் ஏற்படுகிறது.இந்த ரோடு அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆகிறது. தேனி மெயின் ரோட்டில் இருந்து சண்முக சுந்தரபுரம் வழியாக ஜம்புலிப்புத்தூர், லட்சுமிபுரம், அருப்புக்கோட்டை நாயக்கன்பட்டி, வைகை அணை, ரெங்கசமுத்திரம் கிராமங்களுக்கு செல்ல முடியும். விளை பொருட்களை விவசாயிகள் இந்த ரோட்டின் வழியாக கொண்டு செல்கின்றனர். கடந்த பல ஆண்டுகளில் மழையால் சேதமடைந்த ரோடு சீரமைக்கப்படவில்லை.கேபிள் பதிப்பில் ரோட்டின் ஓரங்களில் ஏற்பட்ட பள்ளங்களை சரி செய்யாமல் பல இடங்களில் ரோடு சரிந்துள்ளது. ரோட்டில் பெயர்ந்து கிடக்கும் ஜல்லி கற்கள் வாகனங்களுக்கு பாதிப்பு ஏற்படுத்துகிறது. 1.5 கி.மீ., தூரமுள்ள ரோட்டை சீரமைக்கவும், கண்மாய்க்கரை வழியாக செல்லும் ரோட்டில் தேவையான இடங்களில் தடுப்புச்சுவர் கட்டவும் பொதுப்பணித்துறை, ஊராட்சி ஒன்றிய நிர்வாகங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.