கூடலுார் பஸ் ஸ்டாண்டை ஆக்கிரமிக்கும் வாகனங்கள்
கூடலுார்: கூடலுார் பஸ் ஸ்டாண்டில் ஆக்கிரமித்து தனியார் வாகனங்கள் அதிகமாக நிறுத்துவதால் பஸ்களில் பயணிகள் ஏறுவதற்கு இடையூறு ஏற்பட்டுள்ளது.கூடலுார் பஸ் ஸ்டாண்ட் ரூ.2.30 கோடி மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்டு பிப்.15ல் பயன்பாட்டிற்கு வந்தது. உடனடியாக அனைத்து பஸ்களும் பஸ் ஸ்டாண்டிற்குள் சென்று பயணிகளை ஏற்றிச் செல்லும் நடைமுறை பின்பற்றப்பட்டது.ஆனால் பஸ் ஸ்டாண்டிற்குள் தனியார் வாகனங்கள் அதிகளவில் ஆக்கிரமித்து நிறுத்தப்படுகின்றன. இதனால் சில நேரங்களில் பஸ்கள் திருப்ப முடியாத அளவில் வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. தனியார் வாகனங்கள் அதிகளவில் பஸ் ஸ்டாண்டிற்குள் சென்று வருவதால் பஸ்சிற்காக காத்திருக்கும் பயணிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. நகராட்சி அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென பயணிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.