உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / தீக்காயமுற்ற பெண் இறப்பு; அரசு டாக்டர் பணி நீக்கம்

தீக்காயமுற்ற பெண் இறப்பு; அரசு டாக்டர் பணி நீக்கம்

திருநெல்வேலி; துாத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் தீக்காயப்பிரிவில் அனுமதிக்கப்பட்ட பெண்ணுக்கு போதிய சிகிச்சை அளிக்காமல் தன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை என்ற பெயரில் பணம் பறித்த அரசு டாக்டரை பணி நீக்கம் செய்து மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டது. அவர் ரூ.40 லட்சம் இழப்பீடு வழங்குவது உட்பட மொத்தம் ரூ. 50 லட்சம் இழப்பீடு வழங்க அரசுக்கு மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டது.கோவில்பட்டி அருகே இளையரனேந்தலைச் சேர்ந்தவர் கருப்பசாமி. ராணுவ வீரர். 2018 நவம்பரில் விடுமுறையில் ஊருக்கு வந்திருந்தார். நவ., 27ல் மனைவி ஜெயா வீட்டில் சமையல் செய்த போது புடவையில் தீப்பற்றி தீக்காயமுற்றார். கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அவரை சிகிச்சைக்கு அனுமதித்தனர். அங்கு தீக்காயப்பிரிவில் டாக்டர் பிரபாகரன், தான் 10 நாட்கள் விடுமுறையில் செல்ல உள்ளதாகவும் கோவில்பட்டி தோணுகால் விலக்கில் சொந்தமாக நடத்தும் ஜெய் மருத்துவமனையில் ஜெயாவை அனுமதித்தால் சிகிச்சை அளிப்பதாகவும் கூறினார். இதற்கு கருப்பசாமி மறுத்தார். இதனால் நோயாளிக்கு தொடர்ந்து மூன்று நாட்கள் டாக்டர் சிகிச்சை அளிக்கவில்லை. பின் ரூ. 2 லட்சம் செலவழித்தால் போதும் எனக்கூறி ஜெயாவை டாக்டர் பிரபாகரன் நடத்தும் ஜெய் மருத்துவமனைக்கு வலுக்கட்டாயமாக அவர்களது ஆம்புலன்சில் கொண்டு அனுமதித்தனர்.முதலில் கருப்பசாமி ரூ.2 லட்சம் செலுத்தினார். ஜெய் மருத்துவமனையில் 40 நாட்கள் சிகிச்சையளித்தனர். அதற்கு கட்டணமாக மொத்தம் ரூ.11 லட்சத்து 14,000 பெற்றனர். ஆனால் பில் தர மறுத்தனர். நோயாளியின் மருத்துவ நோய் விபரம், சிகிச்சை விவரம் குறித்தும் தகவல் தரவில்லை. 2019 ஜனவரி 10 ல் உடல் நலம் பாதித்த நிலையில் மீண்டும் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஜன., 26ல் ஜெயா இறந்தார்.இதுகுறித்து கருப்பசாமி மாநில மனித உரிமை ஆணையத்திடம் புகார் செய்தார்.இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட மனித உரிமை ஆணைய உறுப்பினர் கண்ணதாசன், ராணுவ வீரர் கருப்பசாமிக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு தமிழக அரசு வழங்க வேண்டும். அதில் ரூ.40 லட்சத்தை டாக்டர் பிரபாகரன் வழங்க வேண்டும். மற்றொரு டாக்டர் வெங்கடேஸ்வரன் ரூ.2 லட்சம் வழங்க வேண்டும். கோவில்பட்டி அரசு மருத்துவமனை செவிலியர்கள் குமரேஸ்வரி, குரு லட்சுமி ஆகியோர் தலா ரூ.ஒரு லட்சம் வழங்க வேண்டும். தமிழக அரசு ரூ.6 லட்சம் தர வேண்டும். நான்கு வாரங்களுக்குள் இழப்பீட்டை வேண்டும்.மேலும் டாக்டர் பிரபாகரனை உடனடியாக பணி நீக்கம் செய்ய வேண்டும்; மீண்டும் அரசு பணியில் நியமிக்கக் கூடாது. அவர் மீது குற்றவழக்கு பதிவு செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு டாக்டர்கள் தனியார் மருத்துவமனையில் பணியாற்றுவதை கண்காணிக்கப்பட வேண்டும். அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் புகார் பெட்டி வைக்க வேண்டும். இவ்வாறு மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Mani . V
மே 20, 2025 04:19

மன்னன் எவ்வழியோ மக்களும் அவ்வழியே. ஆட்சியாளர்கள் ஊழல்பேர்வழிகளாக இருக்கும் பொழுது அதிகாரிகள் மட்டும் எப்படி நேர்மையானவர்களாக இருப்பார்கள்?


சமீபத்திய செய்தி