| ADDED : டிச 28, 2025 04:10 AM
திருநெல்வேலி: திருநெல்வேலி தீயணைப்பு துறை துணை இயக்குனர் சரவணபாபுவை லஞ்ச ஒழிப்பு போலீசில் சிக்க வைப்பதற்காக தீயணைப்பு துறையினரே அவரது அலுவலகத்தில் நவ.17 நள்ளிரவில் ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் கொண்டு வைத்தனர். அவர்களே தந்த புகாரில் விஜிலென்ஸ் போலீசார் அங்கு ஆய்வு செய்து மறைத்து வைத்த பணத்தை எடுத்தனர். சரவணபாபு மீது வழக்கு பதிவு செய்தனர். ஆனால் அந்த அலுவலகத்திற்கு எதிர் வீட்டில் இருந்த சிசிடிவி காட்சிகள் மூலம் இரவில் பணம் வைக்கப்பட்ட விஷயம் தெரியவந்தது. இது குறித்து சரவணபாபு புகாரின் பேரில் பெருமாள்புரம் போலீசார் தீயணைப்புத்துறை வீரர்கள் ஆனந்த், மூர்த்தி, முருகேஷ் மற்றும் பணம் வைத்த நபர் விஜய், உதவிய முத்து சுடலையை கைது செய்துள்ளனர். இதில் முக்கிய நபராக திருப்பூர் தீயணைப்பு அலுவலர் வீரராஜ் தேடப்படுகிறார்.அவரை விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியும் ஆஜராகவில்லை. அவர் முன் ஜாமின் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தொடர்ந்த மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. அவர் இன்னும் சஸ்பெண்ட் செய்யப்படவில்லை. இந்நிலையில் சம்பவம் நடந்த போது தொடர்புடைய நபர்களுடன் அடிக்கடி அலைபேசியில் பேசிய தூத்துக்குடி மாவட்ட தீயணைப்பு அலுவலர் கணேசன், சென்னை எழும்பூர் தீயணைப்பு அலுவலர் மோரீஸ், கோவை உதவி மாவட்ட தீயணைப்பு அலுவலர் அழகர்சாமி ஆகியோர் இன்று பெருமாள்புரம் போலீஸ் ஸ்டேஷனில் காலை 11:00 மணிக்கு ஆஜராக ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.