பிரேக் பிடிக்காமல் அரசு பஸ்கள் மோதல்: 12 பயணிகள் காயம்
திருநெல்வேலி:திருநெல்வேலி ஜங்ஷன் பகுதியில் அரசு பஸ் பிரேக் பிடிக்காமல் அரசு டவுன் பஸ் மீது மோதியது. இதில் 12 பயணிகள் காயமடைந்தனர்.தென்காசி, புளியங்குடியில் இருந்து திருநெல்வேலி நோக்கி அரசு பஸ் நேற்று காலை வந்தது. அதில் 40 பயணிகள் இருந்தனர். ஜங்ஷன் திருவள்ளுவர் ஈரடுக்கு மேம்பாலத்தில் இருந்து இறங்கி ஜங்ஷன் பஸ் ஸ்டான்ட்டை நோக்கி சென்றது. அப்போது திடீரென பிரேக் பிடிக்கவில்லை. டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் அங்குமிங்குமாக ஓடியது. சென்னல்பட்டியில் இருந்து ஜங்ஷன் வந்த அரசு டவுன் பஸ்சின் பின்புறம் மோதியது. இதில் டவுன் பஸ்சின் பின்புற கண்ணாடியும், புளியங்குடி பஸ்சின் முன்பக்க கண்ணாடியும் உடைந்து சேதமுற்றன. இரு பஸ்களில் இருந்த பயணிகள் 12 பேர் காயமடைந்தனர்.அவர்கள் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. சம்பவம் குறித்து மாநகர போக்குவரத்து போலீசார் விசாரித்தனர்.