ரூ.20 லட்சம் பீடி இலை பறிமுதல் ஊர்க்காவல் படை வீரர் கைது
திருநெல்வேலி:கூடங்குளம் பகுதியில் இருந்து கடல் வழியே இலங்கைக்கு கடத்த வைத்திருந்த ரூ. 20 லட்சம் மதிப்பிலான பீடி இலைகள் பறிமுதல் செய்யப்பட்டன. ஊர்க்காவல் படை வீரர் கைது செய்யப்பட்டார். தென்மாவட்ட கடற்கரை வழியே படகுகள் மூலம் இலங்கைக்கு அத்தியாவசிய பொருட்கள் கடத்தப்படுகின்றன. நேற்று அதிகாலை 3:00 மணியளவில் கூடங்குளம் கலங்கரை விளக்கம் பகுதி அருகே இன்ஸ்பெக்டர் சாந்தி தலைமையிலான தனிப்படை போலீசார் ரோந்து சென்றனர். அந்த வழியாக வந்த மினிலாரியை சோதனையிட்டபோது அதில் ரூ.20 லட்சம் மதிப்பிலான 3 டன் பீடி இலை பண்டல்கள் இருந்தன. டிரைவர் வள்ளியூர், தளபதி சமுத்திரத்தை சேர்ந்த இசக்கியப்பன் 25, என்பவரை கைது செய்தனர். இவர் ஊர்க்காவல் படையில் பணியாற்றி வந்தார். கடத்தலுக்கு பின்னணியில் உள்ளவர்கள் குறித்தும் போலீசார் விசாரிக்கின்றனர்.