உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / ஓட்டுனர்கள் கவனத்தை ஈர்க்கும் விளம்பரங்கள் தேசிய நெடுஞ்சாலையில் விபத்து அபாயம்

ஓட்டுனர்கள் கவனத்தை ஈர்க்கும் விளம்பரங்கள் தேசிய நெடுஞ்சாலையில் விபத்து அபாயம்

பூந்தமல்லி ,: தேசிய நெடுஞ்சாலையில் வைக்கப்பட்டுள்ள,'மெகா சைஸ் பேனர்'கள், வாகன ஓட்டிகள் கவனத்தை ஈர்ப்பதால், அவற்றை அகற்ற வேண்டுமென, கோரிக்கை வலுத்துள்ளது.சென்னை - -பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை பயன்படுத்தி, லட்சக்கணக்கான வாகனங்கள் தினமும் பயணிக்கின்றன. இந்த நெடுஞ்சாலையில் அதிக அளவு விபத்துகள் ஏற்படுகின்றன.இந்நிலையில், பூந்தமல்லி அருகே நசரத்பேட்டை, செம்பரம்பாக்கம், மேவளூர்குப்பம், தண்டலம், இருங்காட்டுக்கோட்டை ஆகிய பகுதிகளில், நெடுஞ்சாலையோரம் பல இடங்களில் 'மெகா சைஸ்' விளம்பர பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.இவை, வாகன ஓட்டிகள் கவனத்தை ஈர்ப்பதால், ஓட்டுனர்கள் கவனம் சிதறி விபத்துகளில் சிக்குகின்றனர். இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:தனியார் விளம்பர ஏஜன்சிகள் தேசிய நெடுஞ்சாலையோரம் உள்ள அடுக்குமாடி கட்டடங்களின் மீதும், காலி நிலங்களில் 20 முதல் 50 அடி உயரத்திற்கு இரும்பு துாண்களை நட்டு, அதில் மெகா சைஸ் பேனர்களை வைக்கின்றனர்.இந்த பேனரில் உள்ள விளம்பரங்களில் கண்கவரும் வகையில் வாகனங்கள், நடிகைகளின் படங்கள் இடம்பெறுகின்றன. தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்களை ஓட்டிச் செல்லும் ஓட்டுனர்களை, பேனரில் உள்ள கண்கவர் காட்சிகள் ஈர்க்கின்றன. இவற்றை வாகன ஓட்டிகள் பார்க்கும் போது, கவன சிதறலால் நிலை தடுமாறி விபத்துக்குள்ளாகின்றனர். மேலும், பலத்த காற்று வீசும் போது பேனர்கள் உடைந்து விழும் ஆபத்தும் உள்ளது.இந்த மெகா சைஸ் விளம்பர பதாகைகள் வைக்க, மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெற்று, அதன் பின் அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கு வரி செலுத்தி வைக்க வேண்டும்.ஆனால், நெடுஞ்சாலையில் வைக்கப்படும் 90 சதவீத பேனர்கள், அனுமதி பெறாமல் வைக்கின்றனர். எனவே, ஆபத்தான இந்த பேனர்களை அகற்ற, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ