| ADDED : ஜூலை 15, 2024 11:05 PM
ஆர்.கே.பேட்டை: ஆர்.கே.பேட்டை ஒன்றியம், ஸ்ரீகாளிகாபுரம் கிராமத்தில், 10 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர். பகுதிவாசிகளுக்கு, மேல்நிலை குடிநீர் தொட்டி வாயிலாக குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. கடந்த 2015ல், ஸ்ரீகாளிகாபுரத்தில் கடும் தண்ணீர் பஞ்சம் நிலவியது. பகுதிவாசிகள் குடிநீருக்காக பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக பருவ மழை சீராக பெய்து வருவதால், தண்ணீர் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏதும் இல்லை. இந்நிலையில் குடிநீரை பாதுகாப்பாகவும், சிக்கனமாகவும் பயன்படுத்த பலரும் தவறிவிடுகின்றனர். இதை நிரூபிக்கும் விதமாக, ஆர்.கே.பேட்டை ஒன்றியம், ஸ்ரீகாளிகாபுரம் கிராமத்தில் குடிநீர் வீணாகி வருகிறது.ஸ்ரீகாளிகாபுரம் பேருந்து நிறுத்தம் அருகே, விநாயகர் கோவில் எதிரே உள்ள தெருக்குழாயின் திருகு உடைந்து, குடிநீர் வீணாக கழிவுநீருடன் கலந்து பாய்ந்து வருகிறது. கிராமத்தின் பிரதான பகுதியில் உள்ள இந்த குழாய் பழுதடைந்துள்ளது குறித்து யாரும் அக்கறை காட்டவில்லை. இரண்டு வாரங்களுக்கும் மேலாக குடிநீர் வீணாகி வருகிறது. கடந்த கால குடிநீர் போராட்டங்களை நினைவு கூர்ந்து, உடனடியாக இந்த குழாய் உடைப்பை சீரமைக்க ஒன்றிய நிர்வாகம் முன்வர வேண்டும்.