| ADDED : ஜூலை 11, 2024 01:01 AM
மீஞ்சூர்:மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டு புதுநகரில் எச்.பி.சி.எல். ,எனப்படும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனம் இயங்கி வருகிறது.இந்த நிறுவனத்தில், 100க்கும் அதிகமானவர்கள் ஒப்பந்த அடிப்படையில் பல்வேறு பிரிவுகளில் பணிபுரிகின்றனர்.கடந்த ஆண்டு, பல்வேறு காரணங்களுக்காக பணிநீக்கம் செய்யப்பட்ட, மூன்று ஊழியர்களை மீண்டும் பணி நியமனம் செய்திட வேண்டும், தொழிலாளர்களுக்கு உரிய பணப்பலன்களை முறையாக வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி நேற்று, தொழிலாளர்கள் நிறுவனத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.தொழிற்சங்க நிர்வாகிகள் தலைமையில் நடந்த போராட்டத்தில் 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் நிறுவன வாயிலை முற்றுகையிட்டபோது, போலீசார் அவர்களை கைது செய்து, தனியார் மண்டத்தில் தங்க வைத்தனர். தொழிற்சங்கத்தினருடன், எச்.பி.சி.எல் நிர்வாகத்தினர் பேச்சு நடத்தி வருகின்றனர்.