| ADDED : ஜூலை 26, 2024 10:57 PM
திருத்தணி:திருத்தணி தாலுகா நெமிலி காலனி பகுதியில் ஆந்திர மாநிலத்தில் இருந்து கள்ளச்சாராயம் கடத்தி விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, 10 நாட்களுக்கு முன் திருவாலங்காடு இன்ஸ்பெக்டர் ராஜகோபால் தலைமையில் கனகம்மாசத்திரம் போலீசார் நெமிலி காலனி பகுதியில் திடீர் சோதனை நடத்தினர்.அப்போது ஆந்திராவில் இருந்து கள்ளச் சாராயம் கடத்தி வந்து விற்பனை செய்த அதே பகுதி சேர்ந்த தட்சிணாமூர்த்தி மகன் கார்த்திக் ,27 என்பவரை போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.மாவட்ட எஸ்.பி., ஸ்ரீநிவாசாபெருமாள், கார்த்திக்கை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்வதற்கு அனுமதிக்க வேண்டும் என மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். கலெக்டர் பிரபுசங்கர், கார்த்திக்கை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்வதற்கு உத்தரவு பிறப்பித்தார். இதையடுத்து போலீசார் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்வதற்கான ஆணையை புழல் சிறையில் உள்ள கார்த்திக்கிடம் வழங்கினர்.