| ADDED : ஜூலை 08, 2024 06:13 AM
கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அடுத்த தேர்வழி ஊராட்சிக்கு உட்பட்ட நேதாஜி நகர் இரண்டாவது தெருவில் வசித்தவர் ராஜ்குமார், 33. அவர் குடும்பத்துடன் வசித்து வரும் வீடு, பொது பாதைக்கு ஒதுக்கப்பட்ட இடம் என தெரிவித்து, இம்மாதம், 4ம் தேதி, கும்மிடிப்பூண்டி தாசில்தார் பிரீத்தி தலைமையிலான வருவாய் துறையினர் இடிக்க சென்றனர். ராஜ்குமார் தன்னிடம் பட்டா இருப்பதாக தெரிவித்து, போதிய கால அவகாசம் வழங்க கோரினார். தாசில்தார் மறுத்ததால், பெட்ரோல் ஊற்றி ராஜ்குமார் தீயிட்டுக்கொண்டார். அவரை மருத்துவமனை அழைத்து சென்ற போது, வருவாய் துறையினர் வீட்டை இடித்து தரைமட்டமாக்கினர்.ஆபத்தான நிலையில் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ராஜ்குமார், நேற்று காலை உயிரிழந்தார். உரிய இழப்பீடு வழங்க வேண்டும், ராஜ்குமார் உயிரிழப்புக்கு காரணமானவர்கள் கைது செய்யப்படும் வரை உடலை வாங்கமாட்டோம் என, அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.இந்நிலையில், அவரது குடும்பத்தினர் நியாயம் கேட்டு மார்க்சிஸ்ட் கட்சி மற்றும் வி.சி., கட்சி நிர்வாகிகளுடன் கும்மிடிப்பூண்டி போலீஸ் நிலையத்தை நேற்று மாலை முற்றுகையிட்டனர்.தாசில்தார் பிரீத்தி மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு, 25 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும், ராஜ்குமாரின், 4 வயது குழந்தையின் படிப்பு செலவுகளை அரசு ஏற்க வேண்டும். ராஜ்குமார் உயிரிழப்புக்கு காரணமானவர்களின் பெயர்களை குறிப்பிட்டு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அவர்கள் மீது வழக்கு பதிந்து கைது செய்ய வேண்டும் என தெரிவித்தனர்.புகார் மீது நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்தனர். மற்ற கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக அரசு தரப்பில் உறுதி அளித்தால் மட்டுமே உடலை பெற்றுக்கொள்வோம் என தெரிவித்து போலீஸ் நிலையம் முன் காத்திருந்தனர்.