கனகம்மாசத்திரம் -- சின்னம்மாபேட்டை தடத்தில் பேருந்து இயக்க கோரிக்கை
திருவாலங்காடு: கனகம்மாசத்திரம் சுற்றுவட்டார கிராமங்களான முத்துக்கொண்டாபுரம், காரணி, காவேரிராஜபுரம், அத்திப்பட்டு, புளியங்குண்டா, வேணுகோபாலபுரம் உட்பட 15க்கும் மேற்பட்ட கிராமங்களில், 35,000க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர்.இவர்கள் வேலைக்காக சென்னை, திருவள்ளூர், அரக்கோணம் செல்ல அவர்கள் வசிக்கும் பகுதியில் இருந்து, 10 முதல் 20 கி.மீ., துாரமுள்ள திருவாலங்காடு ரயில் நிலையம் அமைந்துள்ள சின்னம்மாபேட்டைக்கு தினமும் சென்று வருகின்றனர்.அப்படி வரும் மக்கள் ஆட்டோ வாயிலாகவும், இருசக்கர வாகனத்தில் வருவோரிடம் லிப்ட் கேட்டு சென்று வருகின்றனர்.மக்கள் அதிகமுள்ள இக்கிராமங்களில் இருந்து அரசு பேருந்து சேவை இல்லாததால், சில ஆட்டோ ஓட்டுனர்கள் அதிக கட்டணம் வசூலிப்பதாக அவர்கள் புலம்புகின்றனர்.எனவே, காலை 4:00 மணி முதல் இரவு 12:00 மணி வரை, கனகம்மாசத்திரம் முதல் சின்னம்மாபேட்டைக்கு பேருந்து இயக்க, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.