மேலும் செய்திகள்
மகோகனி மரக்கன்றுகள் இயற்கைக்கு மகோன்னதம்
25-Oct-2024
பொன்னேரி: 'வாரம் ஒரு மரம்' என்ற புதிய சிந்தனையுடன் பயணிக்கும் பொன்னேரி பகுதியில் செயல்படும், 'நேதாஜி மரவங்கி' அமைப்பு கடந்த, 2014ல் மரக்கன்று நடும்பயணத்தை துவங்கியது.இந்த அமைப்பு பொன்னேரியை சுற்றியுள்ள நீர்நிலைகள், பூங்கா, சாலையோரங்களில் மரக்கன்றுகளை வைத்து வளர்ப்பதில்ஆர்வமாக செயல்படுகிறது.மரம் வைப்பது மட்டுமன்றி, அவற்றிற்கு தண்ணீர் விடுவது, வேலி அமைப்பது என, இந்த அமைப்பில் உள்ள இளைஞர்கள், சிறுவர்கள் ஆர்வமுடன் செயல்படுகின்றனர். நேற்று 500வது வாரத்தில், தமிழ்நாடு மீன்வளக்கல்லுாரி மாணவர்களுடன் இணைந்து பொன்னேரி நகராட்சிக்கு உட்பட்ட சக்தி நகர் பூங்காவில் மரக்கன்றுகள் வைக்கப்பட்டன.இது குறித்து அமைப்பின் தலைவர் ஏ.ஸ்ரீதர்பாபு கூறியதாவது:கடந்த, 10 வருடத்தில், பல்வேறு பகுதிகளில், 30,000க்கும் அதிகமான மரக்கன்றுகளை வைத்து பராமரித்து வருகிறோம். அதில், ஏராளமானவை தற்போது நிழல் தருபவைகளாக உள்ளன.அடுத்த சந்ததியருக்கு சொத்து, பணம் சேர்த்து வைப்பது எந்தளவிற்கு முக்கியத்துவம் அளிக்கிறோமோ, அதேபோன்று நல்ல இயற்கை வளங்களை வைத்து விட்டு செல்ல வேண்டும். அந்த இலக்கை நோக்கிய சிறு பயணம் எங்களது 'வாரம் ஒரு மரம்' என்ற சிந்தனை.இவ்வாறு அவர்கூறினார்.
25-Oct-2024