மேலும் செய்திகள்
அடுத்தடுத்து பைக் விபத்து மூவர் இறப்பு
24-Sep-2024
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், நேமம் பகுதியைச் சேர்ந்தவர் தினேஷ், 21. இவர் கல்லுாரி மாணவர். அதே பகுதியைச் சேர்ந்த நண்பர் பாலாஜி, 18, என்பவருடன், நேற்று முன்தினம் இரவு, திருவள்ளூர் - பூந்தமல்லி சாலையில் யமாஹா பைக்கில் சென்று கொண்டிருந்தனர். நேமம் அடுத்த புதுசத்திரம் அருகே, சாலையோரம் நின்றிருந்தமினி வேன் மீது இருசக்கர வாகனம் மோதியது.இதில், பைக்கில் சென்ற இருவரும் துாக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தனர். அப்பகுதியை சேர்ந்தவர்கள், இருவரையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு சிகிச்சை பலனின்றி, தினேஷ், பாலாஜி இருவரும் இறந்தனர். ஆவடி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிந்து, விபத்துக்கு காரணமான வேன் டிரைவர் வேலாயுதம், 47, என்பவரை கைது செய்தனர்.பள்ளிப்பட்டு அடுத்த பொம்மராஜபேட்டையை சேர்ந்தவர், துளசிராமன், 18. இவர், திருத்தணி அரசு கல்லுாரி மாணவர். நேற்று பள்ளிப்பட்டிற்கு ஸ்பிளன்டர் பைக்கில், நண்பர் சந்தோஷ், 29 என்பவருடன் சென்றார். பள்ளிப்பட்டில் இருந்து திரும்பும் போது, எதிரே சதீஷ், 29 என்பவர் ஓட்டி வந்த ஸ்பிளண்டர் பைக் மீது மோதியதில் துளசிராமன் சம்பவ இடத்திலேயே பலியானர். சந்தோஷ் மற்றும் சதீஷ் ஆகிய இருவரும் பலத்த காயத்துடன், திருத்தணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பள்ளிப்பட்டு போலீசார் விசாரித்து வருகின்றனர்.இதே போல், ஆர்.கே.பேட்டை அருகே சோளிங்கர் செல்லும் சாலையில் நேற்று முன்தினம் இரண்டு இருசக்கர வாகனங்கள் மோதியதில், வெள்ளாத்துாரை சேர்ந்த ரேவதி, 30, என்பவர் படுகாயம் அடைந்தார். வேலுார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ரேவதி, சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். இது குறித்து ஆர்.கே.பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
24-Sep-2024